136மொழிமரபு

நன்கு உறுதலும் ஒற்றலும் நெகிழ்ந்த  வழி  இனிது  பிறவா  தென்பது.
தகரநகரங்களின் முயற்சித்திரிபு மிக நுண்ணியதாதலை உணர்க.
 

சூ. 94:

அணரி நுனிநா அண்ணம் ஒற்ற

றஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும் 

(12)
 

க-து:

மெய்களுள் றகரனகரங்களுக்கு வினைக்கள முயற்சி கூறுகின்றது.
அண்ணமும்    நாவுமாகிய   உறுப்புக்களின்   அடிப்படையிற்
பிறப்புவிதி   கூறத் தொடங்கியமையின்   நெடுங்கணக்குமுறை
நோக்காது  உறுப்பமைதி  நோக்கித் தகரனகரங்களின் பின்னர்
றகரனகரங்களின் முயற்சி கூறுகின்றார் எனஅறிக.
 

பொருள்:றகரம் னகரம் ஆகிய இரண்டு மெய்யெழுத்துக்களும் நாவின்
நுனி  (சிறிது  வளைந்து)  மேனோக்கி   எழுந்து   அசைந்து    விரிந்து
அண்ணத்தை நன்கு தொட்டு நிற்கப் பிறக்கும்.
 

அணருதல்=மேல்நோக்கி  அசைந்து  விரிதல்  (அண்ணத்தை நோக்கிச்
செல்லுதல் அணர்தலாயிற்று) மேல்நோக்கி எழுதல் இரண்டற்கும், அசைதல்
றகரத்திற்கும் ஏற்புழிக் கோடல் என்னும் உத்தியாற் கொள்க.
 

சூ. 95 : 

நுனிநா அணரி அண்ணம் வருட

ரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும்
(13)
 

க-து:

மெய்களுள் ரகரழகரங்கட்கு வினைக்கள முயற்சி கூறுகின்றது.
 

பொருள்:ரகரம் ழகரம் ஆகிய இரண்டு மெய் எழுத்துக்களும், நாவின்
நுனி, மேல்நோக்கி அசைந்தெழுந்து அண்ணத்தை வருடப் பிறக்கும்.
 

‘‘தத்தம்   திரிபே   சிறிய’’   என்பதனான்   ழகரத்திற்கு   நாச்சிறிது
உள்வளைதல் கொள்க.
 

சூ. 96: 

நாவிளிம்பு வீங்கி அண்பல் முதலுற

ஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும்

லகாரம் ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும் 
(14)
 

க-து : 

லகரளகர மெய்கட்கு வினைக்கள முயற்சி கூறுகின்றது.
 

பொருள்: லகாரம்  ளகாரம்   ஆகிய  இரண்டு  மெய்யெழுத்துக்களும்
முறையே  நாவினது   விளிம்பு  அண்பல்லின்  அடிப்பகுதியை  நெருங்கி
அவ்விடத்து அண்ணத்தைப் பொருந்தி நிற்கவும், வருடவும் பிறக்கும்.