சூ. 100: | மெல்லெழுத் தாறும் பிறப்பின் ஆக்கம் |
| சொல்லிய பள்ளி நிலையின வாயினும் |
| மூக்கின் வளியிசை யாப்புறத் தோன்றும் |
(18) |
க-து: | மெல்லெழுத்துக்கட்கு வளியிசை இது என்கின்றது. |
பொருள்:ஙஞணநமன என்னும் மெல்லெழுத்துக்கள் ஆறும் அவற்றின் கிளை எழுத்துக்களாகிய வல்லெழுத்துக்களொடு சேர்த்துச் சொல்லிய வினைக்கள முயற்சியான் வடிவுற்று நிலைபெற்றனவாயினும் அவை வெளிப்படுங்கால் மூக்கு வளியிசையினது கட்டுக் கோப்பினான் இசைக்கும். யாப்புற என்றது அதன் திரிபின்மையை உணர்த்திநின்றது. |
இதனான் இவற்றின் கிளையாகிய வல்லெழுத்துக்கள் நெஞ்சு வளியானிசைக்கும் என்பது புலப்படும். விளக்கம் மேற்கூறப்பட்டது. |
மேலும், இதனான் ‘‘மெய்’’ என்பது எழுத்து வடிவு கொள்ளும் நிலையினைச் சுட்டி நிற்கும் என்பதும், வளியிசை உயிர்ப்பினால் அவை ஒலி (புள்ளி) பெற்றுவரும் என்பதும் தெளியலாம். பிறவிளக்கங்கள் மேற்கூறப்பெற்றன. |
சூ. 101 : | சார்ந்துவரி னல்லது தமக்கியல் பிலவெனத் |
| தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும் |
| தத்தம் சார்பிற் பிறப்பொடு சிவணி |
| ஒத்த காட்சியிற் றம்மியல்பு இயலும் |
(19) |
க-து: | சார்பெழுத்துக்களுக்கு வினைக்கள முயற்சி கூறுகின்றது. |
பொருள்: சார்ந்துவரினல்லது தமக்கியல் பிலவெனத் தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும்=இடமும் பற்றுக் கோடுமாகத் தத்தமக்கேற்ற தலைமை எழுத்துக்களைச் சார்ந்து ஒருமொழிக்கண் எழுத்தொலியாக வருதலன்றித் தாமாகத் தனித்துவரும் இயல்பில்லாதன என ஆராய்ந்தறிந்து கூறப்பெற்ற சார்பெழுத்துக்கள் மூன்றும், தத்தம் சார்பிற் பிறப்பொடு சிவணி=தாம் சார்ந்து தோன்றும் தலைமை எழுத்துக்களின் வளியிசை வினைக்களமுயற்சிப் பிறப்பியல்களொடு ஒருங்கொத்து, ஒத்தகாட்சியின் தம்மியல்பு இயலும் = தத்தம் இயல்பொடு கூடி அவ்இரண்டு தன்மையும் ஒத்த தோற்றத்தொடு உருவாகிப் பிறக்கும். |
காட்சி=வடிவத்தோற்றம். ஏனை மூன்றும் சிவணி ஒத்தகாட்சியின் இயலும் என வினைமுடிபு செய்க. |