142மொழிமரபு

சொல்நிலைக்கு  உதவுவனவாயும் துணைவரும் சாரியை இடைச் சொற்களின்
பெயர், தொகையொடு,  அவற்றின்  இயல்புகளையும்  பொதுவான புணர்ச்சி
மரபுகளையும்   விளங்கக்   கூறுகின்றார்.  அதனான்  இவ்வியல்புணரியல்
என்னும் பெயர்த்தாயிற்று.
 

சூ. 103:

மூன்று தலையிட்ட முப்பதிற் றெழுத்தின்

இரண்டு தலையிட்ட முதலா கிருபஃது

அறுநான் கீற்றொடு நெறிநின் றியலும்

எல்லா மொழிக்கும் இறுதியும் முதலும்

மெய்யே உயிரென்று ஆயீ ரியல

(1)
 

க-து :

மொழிமரபினுள்   விரித்தோதப்பெற்ற    மொழி      முதனிலை
இறுதிநிலை  எழுத்துக்களைத்  தொகுத்து   அவை புணர்ச்சிக்குக்
கருவியாமாறு கூறுகின்றது.
 

பொருள்:நூன்மரபினுட்  கூறப்பெற்ற முப்பத்து மூன்று எழுத்துக்களுள்
இருபத்திரண்டு    எழுத்துக்களை    முதலாகவும்,   இருபத்து    நான்கு
எழுத்துக்களை   ஈறாகவும்   கொண்டு    நெறியாக   இயங்கும்   எல்லா
மொழிகட்கும்,     இறுதியும்      முதலுமாக   நிற்கும்     எழுத்துக்கள்
(தொகுத்துநோக்கின்)     மெய்யும்    உயிரும்   என்று   சொல்லப்பட்ட
அவ்இரண்டு இலக்கணத்தனவாகும்.
 

எழுத்துவகையான் இருபத்திரண்டும் இருபத்து நான்கும் என நின்றவை
இனக்குறியீட்டு   வகையான்  இரண்டாக  நிற்கும்  என்றவாறு. முதலாகும்
இருபத்திரண்டாவன:  உயிர்  பன்னிரண்டு, மெய் ஒன்பது,  மொழி  முதற்
குற்றுகரம் ஒன்றுமாம். ஈறாகும் இருபத்து நான்காவன: உயிர்  பன்னிரண்டு,
மெய் பதினொன்று, மொழியிறுதிக் குற்றியலுகரம் ஒன்றுமாம். முதனிலையும்
இறுதி நிலையும்   நோக்கி   மெய்யெனப்   பொதுப்படக் கூறினாராயினும்
‘‘அப்பதி   னொன்றே   புள்ளி   யிறுதி’’   எனவும்,  “மெய்யீ றெல்லாம்
புள்ளியொடு நிலையல்’’ எனவும்,  ‘‘உயிர்மெய்  யல்லன மொழிமுத லாகா’’
எனவும் கூறுதலான். இறுதி  நிற்பது  புள்ளிமெய்  என்றும், முதல் நிற்பது
உயிர்மெய் என்றும் உணர்ந்துகொள்க.
 

மொழி   முதற்  குற்றியலுகரம்   நகரமெய்யை ஊர்ந்து நின்ற தாயினும்
அக்குற்றியலுகரத்தை    முதலாகக்   கொள்ளுதல்  மரபாகலின், ‘‘நெறிநின்
றியலும்’’ என்றார். ‘‘மூன்று தலையிட்ட.....இயலும்’’ என்னும் தொடர்; மொழி
என்பதற்கு  அடையாய்   அதன்  பகுதிகளை  விளக்கி நின்றது. ‘‘ஈரியல’’
என்றது  குறிப்பு  வினைப்பயனிலை.  ஏகாதசம்,  துவாதசம் என்னும் மரபு
ஆரியத்திற்கேயன்றித் தமிழிற்கும்  உரியதே  என்பதை  உணர்த்த  மூன்று
தலையிட்ட, இரண்டு தலையிட்ட எனக் கூறினார்.