நூன்மரபு149
சூ. 111 :

மருவின் தொகுதி மயங்கியல் மொழியும்

உரியவை உரிய புணர்நிலைச் சுட்டே

(9)
 
க-து :

இதுவுமது.
 

பொருள்: வேற்றுமை முதலாய   பொருள்படச்  சொற்கள், தொக்குத்
திரிந்து   ஒருசொல்லாய்   மருவி   நிற்கும்   சொற்களும்,   இடம்மாறித்
திரிந்து  நிற்கும்   சொற்களும்,    புணரியல்  நிலையைக்  கருதுமிடத்துக்
கவர்பொருளில்லாதனவாய் வருவனயாவும் மேற்கூறியாங்கு உரியவாகும்.
 

‘உரியவை உரிய’ என்றதனான் உரியவை அல்லாதனவும்  உளவென்பது
பெறப்படும்.  அவையாவன:  இழிசினர்  வழக்கும்,  பிழைபடு  சொற்களும்,
கவர்பொருள்படுவனவுமாகும்.
 

எ-டு: சோணாடு, மலாடு,  தெனாது,   வடாது இவை மருஉமொழிகள்.
மீகண்,  முன்றில்,    நுனிநா,    புறநகர்    இவை மயங்கியல் மொழிகள்.
அருமந்தபிள்ளை    என்பதுபோல்வன    சான்றோர்    வழக்கன்மையின்
எடுத்துக்காட்டாதற்கு ஏலா என்க. இனி உரியவல்லாதன: வந்திச்சி, போச்சி,
ஆகச்சே, தோப்பனார், தங்கச்சி, கல்லை என்றாற் போல்வனவாம்.
 

சூ. 112 :

வேற்றுமை குறித்த பொருள்மொழி நிலையும்

வேற்றுமை அல்வழிப் பொருள்மொழி நிலையும்

எழுத்தே சாரியை ஆயிரு பண்பின்

ஒழுக்கல் வலிய புணருங் காலை

(10)
 
க-து:

மேற்கூறிய   பெயரும்   தொழிலுமாகிய  சொற்கள் புணருங்கால்
வேற்றுமைப் பொருள்படவும், அல்வழிப்பொருள்படவும்  புணரும்
என்றும்;    ஆண்டு   எழுத்தும்   சாரியையும்  வரும் என்றும்
கூறுகின்றது.
 

பொருள்மேற்கூறிய  சொற்கள்  வேற்றுமைப் பொருள் நிலைகுறித்த
சொற்களும்,   வேற்றுமை   வழியல்லாத   (அல்வழிப்)    பொருள்நிலை
குறித்த சொற்களுமாய்ப்   புணரும். அங்ஙனம்   அவை    இருவழியாகிப்
புணருமிடத்து   அவை   எழுத்தும்    சாரியையும்   பெறுதலாகிய  அவ்
இருபண்பினொடு நடத்தலை வலிமையாக உடையனவாகும்.
 

மெய்பிறிதாதல்    முதலிய  திரிபுகள்    நிறுத்தசொல்லும்    குறித்து
வருகிளவியுமாகிய      சொற்களின்கண்      உறுப்பாகவே      நிற்கும்.
அவ்வாறன்றி   எழுத்தும்   சாரியையுமாகிய    இவை     வேற்றுமையும்
அல்வழியுமாகிய    பொருள்   புலப்பாட்டிற்குத்   துணையாகவும்  உருபு
முதலாயவற்றை ஏற்கத் துணையாகவும் வருமாதலின்