நூன்மரபு151

ஆசிரியர்    அமைத்த  பாடம் ‘‘பொருள் மொழிநிலை’’ என்பதேயாம்.
இதனை: ‘‘ணகார இறுதி வல்லெழுத் தியையின் டகார மாகும்  வேற்றுமைப்
பொருட்கே’’ (புள்ளி.7)   ‘‘யகர   இறுதி   வேற்றுமைப்    பொருள்வயின்
வல்லெழுத் தியையின் அவ்வெழுத்து மிகுமே’’(புள்ளி.62) ‘‘லனஎன வரூஉம்
புள்ளி யிறுதிமுன்.... வேற்றுமை  குறித்த  பொருள்வயி னான’’ (குற்றிய-75)
‘‘அச்சக் கிளவிக்  கைந்தும்  இரண்டும்  எச்ச மிலவே பொருள்வயி னான’’
(வேற்.மய.17) எனப் பின்னர் எடுத்தாளுதலான் அறிக.
 

அல்வழிப்  பொருளாவது:   அறுவகை   வேற்றுமைப்  பொருள்நிலை
யல்லாத  பிறவெல்லாம்  என்க.  அல்வழி  என்பது வேற்றுமையல்லாதவழி
என்னும்  பொருளது.   இஃது   அஃறிணை  என்பது போல்வதொரு மரபு.
அவையாவன:  எழுவாய்த்தொடர்,  விளித்தொடர்,   வினைமுற்றுத்தொடர்,
இருவகை எச்சங்களின் புணர்ச்சி, இடைச்சொற்றொடர், உரிச் சொற்றொடர்,
வேற்றுமைத்    தொகை    மொழியல்லாத   பிற   தொகை   மொழிகள்,
அடுக்குத்தொடர் முதலியனவும் பிறவுமாம்.
 

எழுத்தே   என்னும்   ஏகாரம் எண்ணுப் பொருளது. ‘‘ஒழுகல் வலிய’’
என்பது எதுகை நோக்கிச் செய்யுள்   விகாரமாய்   ஒழுக்கல்  வலிய  என
நின்றது. பிறவினைப் பொருள்பட நின்றது எனினும் அமையும்.
 

எ-டு :பண்ணுப்பெயர்த்து, - பொருநக் கடுமை - இவை வேற்றுமைப்
புணர்ச்சியுள்  எழுத்துப்பெற்றன. உரிஞுக்கடிது,  பொருநுக்கடிது -  இவை
அல்வழிப்    புணர்ச்சியுள்   எழுத்துப்     பெற்றன.      மகவின்கை -
வேற்றுமைப்புணர்ச்சியுள்    சாரியை  பெற்றது. பனையின் குறை (பனையும்
குறையும்) அல்வழியுள் சாரியை பெற்றது.
 

சூ. 113:

ஐஒடு குஇன் அதுகண் என்னும்

அவ்ஆறு என்ப வேற்றுமை உருபே

(11)
 
க-து :

வேற்றுமைப்     பொருட்புணர்ச்சி    கூறிய     அதிகாரத்தான்
அவற்றிற்குரிய உருபுகள் இவை எனக் கூறுகின்றது.
 

பொருள்:ஐ, ஒடு, கு, இன், அது,  கண்  என்று கூறப்படும் அவ்வகை
ஆறும் வேற்றுமை செய்யும் உருபுகள் எனக் கூறுவர் ஆசிரியர்.
 

சொல்லதிகாரத்து   வேற்றுமை   எட்டு  எனக்கூறுதலின் ஈண்டு ஆறு
எனக்கூறுதல் முரண் எனக் கருதற்க என்பார், ‘அவ்ஆறு என்ப வேற்றுமை
உருபே’’ என்றார். புணர்மொழியிடத்துப்