நூன்மரபு159

பொருள் :மேற்கூறப்பெற்ற சாரியைதாம்  இன்னும், வற்றும்,  அத்தும்,
அம்மும், ஒன்னும், ஆனும்,    அக்கும்,  இக்கும்,  அன் என்னும்  கிளவி
உளப்பட     அவைபோல்வன   பிறவும் சாரியை மொழிகள் எனக்கூறுவர்
நூலோர்.
 

உளப்பட அன்ன பிறவும் எனக்கூட்டுக. அதனான் இவை சிறப்புடையன
என்பதும் பெறப்படும். ஏகாரம் ஈற்றசை. அன்னபிறவாக வருவன : அ,உ, ஈ,
ஏ, ஐ, தம், நம், நும், கு, இன் முதலியனவாம்.
 

வேற்றுமைப்    பொருள்    குறித்தும்   அல்வழிப் பொருள் குறித்தும்
சொற்கள்    தம்முட்    புணருங்கால்   அவை   பெயரும் வினையுமாகப்
புணரும்என  மேல்  விதந்து   கூறப்பெற்றமையானும்,   உரிச்   சொற்கள்
பெயராயும்   வினையாயும்    அடையாயும்    நின்று     புணர்தலானும்,
இடைச்சொற்களுள் வேற்றுமைப்  பொருள்வயின்  உருபாக வருவனவற்றின்
புணர்ச்சி இயல்புகளை உருபியலுள் விதந்து கூறுதலானும்,தத்தம் பொருளாய்
வரும் இடைச்சொற்களும் உவமஉருபிடைச் சொற்களும் பெயர் வினைகளுள்
அடங்கிப்   புணர்ச்சி     விதிகளை     எய்துதலானும்,  அவற்றைவிட்டு,
ஒருமொழியைச் சார்ந்தன்றி வருதலாற்றாத சாரியை    இடைச்   சொற்கள்
புணர்மொழிகளின்    இடையே    வருங்கால்   அவை   எய்தும் திரிபும்
இயல்புமாகிய நிலைமைகளை இவ்வியலின்  கண்ணே   வைத்து  ஆசிரியர்
விளக்குவாராயினர்.
 

இனி,   இவ்வியலுள்    எடுத்துக்கூறப்பெறும்  சாரியை விதிகளுக்குரிய
எடுத்துக்காட்டுக்கள் அவ்வவ்விடத்துக் காட்டப்பெறும். அங்ஙனம்  விதந்து
கூறாமல் அன்னபிறவும் எனத்தழுவிக் கொள்ளப்பெற்ற சாரியைகட்கு ஈண்டு
எடுத்துக்காட்டுக்கள் தருதும்.
 

அ: தமக்கு, தமது, பொருநக்கடுமை, எகினப்புள் எனவும், க, ங எனவும்
அகரச்சாரியை வந்தது. ஆ : (இல்பொருள்) இல்லாப்பொருள் என ஆகாரச்
சாரியை வந்தது. ஈ : சென்றீ பெருமநிற் றகைக்குநர்  யாரே  என  ஈகாரச்
சாரியை வந்தது. ஏ : உழக்கேயாழாக்கு,  ஒன்றேகால் என ஏகாரச் சாரியை
வந்தது. அட்டி லோலைத் தொட்டனை நின்மே  என்பதும் ஏகாரச்சாரியை.
ஐ: (இல்பொருள்) இல்லைப்   பொருள் - அப்பொருளிரட்டாதிவணை யான
என ஐகாரச் சாரியை   வந்தது. தம் : எல்லார் தம்மையும் எனவரும். நம் :
எல்லா  நம்மையும்   எனவரும்.  நும்: எல்லீர் நும்மையும் எனவரும். கு :
உண்குவ,    திண்குவ எனவரும். ன் : ஆன்கோடு, மான்கோடு, எனவரும்.
பிறவும் அன்ன.