வாழ்த்துரை
 

திருப்பணிச்செல்வர்

தவத்திரு காத்தையாசுவாமிகள்

வாளமர்கோட்டை - தஞ்சாவூர்.
 

உலகம்  உய்யும்   பொருட்டு    ஆலவாயிலமர்ந்து   சிவபெருமானும்,
செவ்வேளும்,  திருமாலும்   வளர்த்த  தெய்வத்  தமிழ்,   நாயன்மாராலும்
ஆழ்வார்களாலும்   மந்திரமாக    வழங்கப்     பெற்ற     மறைமொழி,
உலகமொழிகளுள்  மூத்தது,  என்றும்  இளையது, இதன்  இலக்கண முதல்
நூலை இறைவனே  படைத்தளித்தான் என்பது சான்றோர் கொள்கை. அந்த
முதனூலின் வழிவந்த தொல்காப்பியம் காலத்தால் முந்தியது முழுமையானது
என்பது  கற்றோர்   கருத்து.  இந்நூலுக்குப்  பல  பெரியோர்கள்   உரை
எழுதியுள்ளனர்.   விளக்கங்களும்    ஆராய்ச்சி    உரைகளும்    வந்து
கொண்டுள்ளன. மெய்யறிவாளர்களின்  நூல்கள்  காலத்தைவென்று நிற்பன
ஆதலால்   காலந்தொறும்   புதிய   கருத்துக்கள்  அவற்றுள்  தோன்றிக் கொண்டே இருக்கும்.  அவ்வகையில்  இப்பொழுது  தொல்காப்பியத்திற்குப்
புதியதொரு ஆராய்ச்சிக் காண்டிகையுரை பிறந்துள்ளது.
 

இவ்வுரையைப்    படைத்துள்ள     புலவர்     பாலசுந்தரம்    என்
அன்பிற்குரியரான அமரர் பா. மு. சந்திரசேகரன் பிள்ளையின்  மகனாவார்.
இவரை  ஏறக்குறைய ஐம்பது  ஆண்டுகளாக யான் அறிவேன். இளமையில்
நல்ல ஒரு கருங்கற்  சிற்பியாகவும்  அரிய  சித்தர்களின்  தொண்டராகவும் வளர்ந்தவர். வாளமர்கோட்டைத் திருக்கோயில்  திருப்பணி  குடமுழுக்குத்
தொடர்பான எழுத்துப் பணிகளுக்குத் துணையாக  இருந்து பலபாடல்களை இயற்றித்  தந்துள்ளார்.  நல்லபண்பும்  தெய்வப்பற்றும்  உடையவர்.  ஒரு
சமயம்  கோயிலுக்கு வந்திருந்த போது ‘சுவாமி நான் தொல்காப்பியத்திற்கு
ஒரு காண்டிகையுரை எழுத விரும்புகிறேன் எனக்கு ஆசியளித்தருளுங்கள்’
என்றார்.  அதுபெரியதொரு  வேலையாகுமே  இவர்  அதனை   எப்படிச்
செய்வார்  என  என்  மனம்  எண்ணியது.  அதனால்  அது  ‘கடினமான
பணியாயிற்றே பண  வருவாயையும்  எதிர்பார்க்க இயலாதே. இது போன்ற
ஆராய்ச்சிகளை   நம்மவர்    உயிரோடிருக்கும்    போது    பாராட்டக்
கூடமாட்டார்களே’ என்று சொன்னேன். அதற்கு அவர் இவற்றை யெல்லாம்
ஓரளவு  எண்ணினேன். என்றாலும் இதனைச் செய்யவேண்டுமென்று எனது
உள்ளுணர்வு தூண்டுகிறது.