‘‘உடம்படுமெய்யின் உருவு கொளல்’’ என்று பாடமோதுவார் உரையாசிரியன்மார். அப்பாடத்திற்குப் பொருள் நோக்கின்மையறிக. | பேச்சு வழக்கினும் உரைநடை வழக்கினும் உடம்படுமெய் கொள்ளாதொழியினும் செய்யுட்கண் ஓசை இயைபு செய்தலின் ஒருவந்தம் கொள்ளல் வேண்டுமென்பார் ‘‘வரையார்’’ எனக்கூறினார். ஒருமொழிப் புணர்ச்சிக்கண் நிற்கும் உயிரும், புணர்ச்சி விகாரத்தான் மிகும் உயிரும் உடம்படுமெய்பெறா என அறிக. | எ-டு: விளவழகு, சிலவுயிர், நிலாவெழுந்தது, விழியழகிது,தீயெழுந்தது, கடுவோங்கிற்று, பூவழகிது, ஆடூஉவறிசொல், சேவெழுந்தது, மலையதிர்ந்தது, கோவெதிர்ந்தான், வௌவிழிந்தது எனவரும். எகர ஒகரங்கள் எவ்வணி, நொவ்வுற்றான் என இரட்டித்து வரும். | பெரும்பான்மையும் இகர, ஈகார, ஐகார ஈறுகளின்முன் யகரமும் ஏனைய உயிரீறுகளின் முன் வகரமும், ஏகாரத்தின்முன் மேயினான், மேவினான் என இரண்டும் வரும். சிறுபான்மை மாயிரு ஞாலம், கோயில் என ஆகார ஓகாரங்கள் யகரமும் பெறும். இவை இயல்பீறு. ‘ஆயிருதிணை’ என்பது விதியீறு. | இனிச், சார்வுழி, செல்வுழி எனவும் விண்வத்துக்கொட்கும் எனவும் புள்ளியீற்று முன் வந்த வகரம் எடுத்தலோசையான் வந்தவிகாரம் என்க. வழுவமைதி எனினுமாம். ‘வரையார்’ என்றதனான் உடம்படுமெய் பெறுதல் ஒருதலையன்று எனக்கூறி மூங்கா அரிது-மூங்கா இல்லை என்பவற்றை எடுத்துக்காட்டுவர் உரையாளர். இவை விட்டிசைத்தலின் புணர்மொழியாகாமை யறிக. | புளியங்கோடு,எருவங்குழி,நனியுயர்ந்தான்,சாலவழகிது என இடைச்சொல், உரிச்சொற்களின்கண் வந்தன. பிறவும் இவ்வாறே கண்டு கொள்க. | சூ. 141: | எழுத்தோ ரன்ன பொருள்தெரி புணர்ச்சி | | இசையிற் றிரிதல் நிலைஇய பண்பே | (39) | க-து : | இனிவரும் சிறப்பியல்களுள் வேற்றுமை உருபு புணரும் புணர்ச்சி இலக்கணத்தை உருபியலின் கண்ணும் வேற்றுமைப் பொருட்புணர்ச்சி இலக்கணத்தை மற்ற இயல்களுள்ளும் வகுத்துக்கூறுவார் ஆசிரியர். அவ்வழி உருபுவிரிந்து நிற்கும் புணர்மொழிகளின் பொருள் திரிபுபடாது நிற்கும். உருபு தொக்குவரும் பொருட்புணர்ச்சி இடத்திற்கேற்பப் பொருள் வேறுபட்டு வருமாறும், |
|
|