நூன்மரபு179

இவ்விலக்கணத்தை   அகத்தோத்தினுள்     கூறின்    நாற்பத்தெட்டு
நூற்பாக்களான்    கூறல்     வேண்டும்.    இதனான்    தொகைமரபின்
இன்றியமையாமை   தெளியப்படும்.  ஏனையவற்றையும் இவ்வாறே அறிந்து
கொள்க.
 

ஆசிரியர், ஞநமயவ என்றும்   உயிர் என்றும் எடுத்துக் கூறியமையான்
நுந்தை என்பதை   வருமொழிக்   குற்றியலுகரத்திற்கு  எடுத்துக்காட்டாகக்
காட்டுதல்  வேண்டாத   ஒன்றாம்.   புணரியற்  கொள்கையின்படி   அது
மெய்ம்முதலாக அடங்குமென்க.
 

சூ. 145 :

அவற்றுள்

மெல்லெழுத் தியற்கை உறழினும் வரையார்

சொல்லிய தொடர்மொழி இறுதி யான

(3)
 
க-து :

வருமொழி   மென்கணத்திற்கு   எய்தியதன்மேற்  சிறப்பு  விதி
கூறுகின்றது.
 

பொருள் :மேற்கூறிய இயல்புகணம் மூன்றனுள், மெல்லெழுத்துக்களின்
இயல்பு மேற்கூறியவாறன்றி,மொழிமரபினுட் சொல்லிய மூவகை மொழிகளுள்
தொடர்மொழிகளின் இறுதிக்கண் உறழ்ந்துவரினும் நீக்கார் ஆசிரியர்.
 

எ-டு :வெதிர்ஞ்ஞெரி,     வெதிர்ந்நுனி,    வெதிர்ம்முறி   எனவும்
இதழ்ஞ்ஞெரி, இதழ்ந்நுனி, இதழ்ம்முறி எனவும் வரும்.
 

ஒருசார்  யகர, ரகர, ழகர ஈற்றுச்   சொற்களின்   முன்னர் வன்கணம்
உறழுமெனப் புள்ளிமயங்கியலுள் (சூ-65, 67, 88, 92) கூறப்  பெற்றமையின்,
அவ்வாறே மெல்லெழுத்துக்களும் அவ்ஈறுகளின் முன்னர் உறழ்ந்து வருதல்
உண்டென்று உணர்த்துவராய் வல்லெழுத்துறழ்ச்சி   மூவகை   மொழிக்கும்
பொதுவாகி      நிற்றலின்   ஈண்டுத்   தொடர்மொழிக்கண்  வரும் என
விதந்தோதினார்.    உம்மை  எதிர்மறையாகலின்     மிகாது    வருதலே
வலியுடைத்தாதலறிக.
 

இனிக், கைம்மிகல்,  கைந்நீட்சி,   மெய்ஞ்ஞானம்,   மெய்ந்நிலை  என
ஓரெழுத்தொருமொழி, ஈரெழுத்தொருமொழிக்கண் மிக்கு வருதலை ‘‘ஈறியல்
மருங்கின்’’ என்னும் இவ்வியலின் புறனடையாற் கொள்க.
 

சூ. 146 :

ணனவென் புள்ளிமுன் யாவும் ஞாவும்

வினையோ ரனைய என்மனார் புலவர்

(4)
 
க-து :

வருமொழி யகரத்திற்குரியதொரு தன்மை கூறுகின்றது.