நூன்மரபு201

தழூ-வௌ   என்பவை   தொழிற் பெயர்கள்.  அவற்றைத் தழுவினைச்
செய்தான்   (தழுவுதலைச் செய்தான்),    வௌவினைச்   செய்தான்  என
வினையொடு கூட்டிக் கண்டு கொள்க. பின்வரும் தொழிற்    பெயர்கட்கும்
இவ்விளக்கம் ஒக்கும். “இன்னென வரூஉம் வேற்றுமை உருபிற்கு இன்னென்
சாரியை இன்மை வேண்டும்” (புணரி-29)   என்பதனான்   ஐந்தாம்  உருபு
சாரியை பெறாது. விளவின் நீங்கினான்,  பலாவின்   நீங்கினான் எனவரும்.
ஏனைய ஈறுகளொடும் இவ்வாறே ஒட்டிக் கண்டு கொள்க.
 

சூ. 174:

பல்லவை நுதலிய அகர இறுபெயர்

வற்றொடு சிவணல் எச்ச மின்றே

(2)
 
க-து :

ஒருசார் அகர ஈற்றுப் பெயர்களுக்குச் சிறப்புவிதி கூறுகின்றது.
 

பொருள்:பன்மைப் பொருளைச் சுட்டிவரும் அகர ஈற்றுப் பெயர்களின்
முன்வரும் உருபு,    வற்றென்னும்    சாரியையொடு   பொருந்தி வருதல்
ஒழிதலின்று. ஏகாரம் ஈற்றசை.
 

எ-டு:பல்லவற்றை,    பல்லவற்றொடு,  பல்லவற்றுக்கு,  பல்லவற்றின்,
பல்லவற்றது, பல்லவற்றுக்கண் எனவரும். பல, சில,  உள,    உள்ள,  பிற
என்பவற்றொடும்,    உண்ப,   தின்ப,   கரிய,    பெரிய,   பொன்னன்ன
என்பவற்றொடும் இவ்வாறே ஒட்டிக் கண்டுகொள்க.
 

‘‘பல்லவை”  என  உடம்பொடு புணர்த்திக் கூறினமையின் சிறுபான்மை
சாரியை    இன்றி    வருதலும்   கொள்க.   ‘‘எச்சமின்று ’’ என்பதனான்
பலவற்றிற்கு, பலவற்றின்கண் என நான்கும் ஏழும் வற்றொடு   இன்சாரியை
பெற்று ஒருங்கு வருதலும் கொள்க. இனி வருவனவற்றிற்கும் ஈதொக்கும்.
 

சூ. 175 :

யாவென் வினாவும் ஆயியல் திரியாது

(3)
 
க-து :

‘யா’   வென்னும்   வினாப்   பெயர்க்கும்   அவ்விதி ஒக்கும்
என்கின்றது.
 

பொருள்:யா என்னும்   ஓரெழுத்தொரு  மொழியாகிய ஆகார ஈற்று
வினாப்பெயரும் அவ்விலக்கணத்திற்றிரியாது வரும்.
 

எ-டு:யாவற்றை, யாவற்றொடு, யாவற்றுக்கு,  யாவற்றின்,   யாவற்றது,
யாவற்றுக்கண் எனவரும். இப்பெயர்    சாரியை   இன்றிவரின்   பொருள்
கவர்க்கும் ஆதலின் ‘திரியாது’ என வலியுறுத்தப் பெற்றதென்க.