குறுகுவது பெயர் அன்று. எழுத்தே என்பது உணர நெடுமுதல் குறுகும் என்றார். அங்ஙனம் தோன்றிய ஒற்றொடு உருபு பொருந்திப்புணரும் என்பது கருத்து. |
எ-டு:நின்னை, நின்னொடு, நினக்கு, நின்னின், நினது, நின்கண் எனவரும். |
சூ. 180 : | ஓகார இறுதிக்கு ஒன்னே சாரியை |
(8) |
க-து : | ஓகார ஈற்றுச் சொல்லொடு உருபு புணருமாறு கூறுகின்றது. |
பொருள் :ஓகார ஈற்றுச் சொல்லிறுதியொடு உருபு புணருங்கால் ஒன் என்பது சாரியையாகவரும். ஏகாரம் இசைநிறை. |
எ-டு:கோஒனை, கோஒனொடு, கோஒற்கு எனவரும். பிறவற்றொடும் ஒட்டிக் கொள்க. இதனை அளபெடை போல இசைத்தல் வேண்டும். |
சூ. 181: | அஆ என்னும் மரப்பெயர்க் கிளவிக்கு |
| அத்தொடும் சிவணும் ஏழ னுருபே |
(9) |
க-து : | அகர ஆகார ஈற்று மரப்பெயர்க்கு முன்வரும் ஏழனுருப்பிற்குச் சிறப்பு விதி கூறுகின்றது. |
பொருள் :அகரம் ஆகாரம் என்னும் எழுத்துக்களை ஈறாக உடைய மரப்பெயர்ச் சொற்களுக்கு முன்வரும் ஏழனுருபு இன் சாரியையேயன்றி அத்துச்சாரியையொடும் பொருந்தி வரும். |
எ-டு: விளத்துக்கண், பலாவத்துக்கண் எனவரும். ‘‘அத்தி னகரம் அகரமுனை இல்லை’’ என்றதனான் விளத்துக்கண் என நின்றது. விளவத்துக்கண் எனக்காட்டித் “தெற்றென் றற்றே” (புணரியல் - 31) என்ற மிகையான் அகரம் கெடாது நின்றது என்பார் நச்சினார்க்கினியர். |
சூ. 182 : | ஞநவென் புள்ளிக்கு இன்னே சாரியை |
(10) |
க-து : | ஞ ந என்னும் புள்ளியீற்றுச் சொல்முன் இன்சாரியை பெறுமென்கின்றது. |
பொருள் :ஞகர நகரப் புள்ளிகளை ஈறாக உடைய சொற்களின் முன் உருபு வருங்கால் இன் சாரியை பெறும். |
எ-டு:உரிஞினை, உரிஞினொடு, பொருநினை, பொருநினொடு எனவரும். இவை தொழிற்பெயர். வெரிநினை, வெரிநினொடு இது பெயர். ஏனை உருபுகளொடும் ஒட்டிக் கொள்க. (வெரிந் = முதுகு) ஏகாரம் இசைநிறை. |