சூ. 183 : | சுட்டுமுதல் வகரம் ஐயும் மெய்யும் |
| கெட்ட இறுதி இயல்திரி பின்றே |
(11) |
க-து : | வகர ஈற்றுச் சுட்டுப் பெயர்க்குமுன் சாரியை பெறுமாறு கூறுகின்றது. |
பொருள் :சுட்டெழுத்தினை முதலாக உடைய வகர ஈற்றுச் சொல்முன் உருபு வருங்கால், யாவை என்னும் சொல்லிற்கு ஓதிய இலக்கணத்தின் திரிபின்றி வரும். அஃதாவது வற்றுச்சாரியை பெறும் என்றவாறு. |
யாவை என்னும் சொல்லொடு மாட்டேற்றிக் கூறுதல் விளங்க ஐயும் மெய்யும் கெட்ட இறுதி என்றார். |
எ-டு:அவற்றை, இவற்றை, உவற்றை எனவரும். ஏனைய உருபொடும் ஒட்டிக் கொள்க. நிலைமொழி வகரக்கேடு ‘‘அத்தே வற்றே’’ (புணரியல்-31) என்பதனாற் கூறப்பட்டது. |
சூ. 184 : | ஏனை வகரம் இன்னொடு சிவணும் |
(12) |
க-து : | தெவ் என்னும் சொல்முன் சாரியை வருமாறு கூறுகின்றது. |
பொருள் :வகர ஈற்று மொழி நான்கனுள் சுட்டுப் பெயரொழிந்த ஏனைத் தெவ் என்னும் உரிச்சொல்லின் வகரத்தின் முன் உருபு புணருங்கால் இன் சாரியையொடு பொருந்தி வரும். |
எ-டு:தெவ்வினை, தெவ்வினொடு, தெவ்விற்கு எனவரும். பெயரினும் வினையினும் உரிச்சொல் மெய்தடுமாறி வருமென்பதனான் தெவ் என்பது பெயராக நின்றது. தெவ் - பகைமை. அஃது உருபேற்றலைக் கூறுதலான் அது வினைச்சொல்லாகத் தடுமாறாது என்பது பெறப்படும். |
சூ. 185 : | மஃகான் புள்ளிமுன் அத்தே சாரியை |
(13) |
க-து : | மகர ஈற்றுச் சொற்களின் முன்வரும் சாரியை கூறுகின்றது. |
பொருள் :மகர ஒற்றினை ஈறாக உடைய பெயர்கட்கு முன் உருபு வருங்கால் பெறும் சாரியை அத்து என்பதேயாம். ஏகாரம் தேற்றம். |
எ-டு :மரத்தை, மரத்தொடு எனவும்; மகத்தை, மகத்தொடு எனவும் வரும். ஏனைய உருபுகளொடும் ஒட்டிக் கொள்க. (மகம்-நாட்பெயர்.) |
நிலைமொழி மகரக்கேடு புள்ளிமயங்கியலிற் கூறப்பட்டது. அவ்வழி அவை அகரஈறாதலின் அத்தின் அகரம் கெடுமென்க. |