நூன்மரபு205
சூ. 183 :

சுட்டுமுதல் வகரம் ஐயும் மெய்யும்

கெட்ட இறுதி இயல்திரி பின்றே

(11)
 
க-து :

வகர   ஈற்றுச்    சுட்டுப்    பெயர்க்குமுன் சாரியை பெறுமாறு
கூறுகின்றது.
 

பொருள் :சுட்டெழுத்தினை முதலாக உடைய வகர ஈற்றுச் சொல்முன்
உருபு வருங்கால்,   யாவை   என்னும்  சொல்லிற்கு ஓதிய இலக்கணத்தின்
திரிபின்றி வரும். அஃதாவது வற்றுச்சாரியை பெறும் என்றவாறு.
 

யாவை   என்னும்   சொல்லொடு மாட்டேற்றிக் கூறுதல் விளங்க ஐயும்
மெய்யும் கெட்ட இறுதி என்றார்.
 

எ-டு:அவற்றை,  இவற்றை, உவற்றை எனவரும். ஏனைய உருபொடும்
ஒட்டிக் கொள்க. நிலைமொழி வகரக்கேடு ‘‘அத்தே வற்றே’’  (புணரியல்-31)
என்பதனாற் கூறப்பட்டது.
 

சூ. 184 :

ஏனை வகரம் இன்னொடு சிவணும்

(12)
 
க-து :

தெவ் என்னும் சொல்முன் சாரியை வருமாறு கூறுகின்றது.
 

பொருள் :வகர   ஈற்று   மொழி  நான்கனுள் சுட்டுப் பெயரொழிந்த
ஏனைத்   தெவ்    என்னும்   உரிச்சொல்லின்   வகரத்தின் முன் உருபு
புணருங்கால் இன் சாரியையொடு பொருந்தி வரும்.
 

எ-டு:தெவ்வினை,  தெவ்வினொடு,  தெவ்விற்கு எனவரும். பெயரினும்
வினையினும்   உரிச்சொல்  மெய்தடுமாறி வருமென்பதனான் தெவ் என்பது
பெயராக   நின்றது.  தெவ் - பகைமை. அஃது உருபேற்றலைக் கூறுதலான்
அது  வினைச்சொல்லாகத் தடுமாறாது என்பது பெறப்படும்.
 

சூ. 185 :

மஃகான் புள்ளிமுன் அத்தே சாரியை

(13)
 
க-து :

மகர ஈற்றுச் சொற்களின் முன்வரும் சாரியை கூறுகின்றது.
 

பொருள் :மகர   ஒற்றினை   ஈறாக உடைய பெயர்கட்கு முன் உருபு
வருங்கால் பெறும் சாரியை அத்து என்பதேயாம். ஏகாரம் தேற்றம்.
 

எ-டு :மரத்தை,  மரத்தொடு   எனவும்;  மகத்தை, மகத்தொடு எனவும்
வரும். ஏனைய உருபுகளொடும் ஒட்டிக் கொள்க. (மகம்-நாட்பெயர்.)
 

நிலைமொழி  மகரக்கேடு   புள்ளிமயங்கியலிற்  கூறப்பட்டது. அவ்வழி
அவை அகரஈறாதலின் அத்தின் அகரம் கெடுமென்க.