நூன்மரபு207

பொருள் :தாம்   நாம்   என்னும்  மகர  ஈற்றுப் பெயரிறுதியும் யாம்
என்னும்    பெயரிறுதியும்   நும்    என்னும்    பெயர்போல உருபுவரின்
இயற்கையாகப்    புணரும்.   ஆண்டு   யாம் என்னும் பெயரின் ஆகாரம்
எகரமாகும். அவ்விடத்து யகரமெய்கெடும். ஏனைய    தாம்  நாம் என்னும்
இரண்டு சொற்களின் நெட்டெழுத்துக்கள் குறுகும்.
 

என்றது;   தாம்,  நாம்  என்பவை தம், நம் எனவும் யாம் என்பது எம்
எனவும் திரிந்து உருபேற்கும் என்றவாறு.
 

எ-டு:தம்மை,  நம்மை,  எம்மை  எனவரும். ஏனைய உருபுகளொடும்
ஒட்டிக் கொள்க.
 

சூ. 189 :

எல்லாம் என்னும் இறுதி முன்னர்

வற்றென் சாரியை முற்றத் தோன்றும்

உம்மை நிலையும் இறுதி யான

(17)
 
க-து :

எல்லாம்   என்னும்    பொதுப்பெயர்   உருபேற்கும் முறைமை
கூறுகின்றது.
 

பொருள் :அஃறிணைப்   பொருள்பற்றி   வரும்  எல்லாம்  என்னும்
பொதுப் பெயர் இறுதி முன்னர்,உருபு வருங்கால் வற்று என்னும்   சாரியை
முழுமையாகத் தோன்றும். இறுதிக்கண் ஓர் உம்மை   உருபின்   பின்வந்து
நிலைபெறும்.
 

இவ்வும்மை    முற்றுப்   பொருட்டாய்   நிற்கும். மேல், ‘‘உயர்திணை
யாயின்   நம்இடைவரு’’ மென்பதனான் இஃது அஃறிணைப் பொருள் பற்றி
வருவது என்பது பெறப்படும்.
 

எ-டு :எல்லாவற்றையும், எல்லாவற்றொடும்,எல்லாவற்றிற்கும் எனவரும்.
வற்றொடு இன்சாரியை வருதல் மேற்கூறப்பட்டது.
 

எல்லாம்   என்பதன்  மகரத்தை  வற்றின்  மிசை ஒற்று எனக் கெடுக்க
என்பார் உரையாசிரியன்மார். அது நம்முச்சாரியை வருங்காலும் கெடுதலின்
மகரஇறுதி (சூ. 311) என்னும் பொது விதியாற் கெட்டது என்பதே நேரிதாம்.
 

இனி,எல்லாவற்றொடும் எல்லாவற்றுக்கும் எனவரும் ஒடுவும் குவ்வுமாகிய
உருபுகளின்மேல் உயிர் ஏறி முடியாவாகலின்   உருபுகளின்  முற்றுகரத்தை
‘முற்ற’ என்னும் மிகையாற்   கெடுக்க   என்பார் உரையாசிரியன்மார். அது
பொருந்தாது. என்னை? உருபுகள் தனித்து   நின்று  பொருளுணர்த்துதற்கு
ஆற்றாத