நூன்மரபு208

இடைச்சொற்களாதலின்  அவை   பெயரொடு    கூடியவழி ஒரு சொல்
நீர்மைத்தாய்      ஒற்றுமைப்பட்டுத்        தொடர்    மொழியிறுதியாய்
நிற்கும். அவ்விடத்து அவை குற்றியலுகரமேயாகலின்   உம்மையின்  உயிர்
அவற்றின்    மேல்   ஏறி   முடியுமென்க. ஏனைய விளக்கங்களை எனது
குற்றியலுகர ஆய்வுக் கட்டுரையுட் கண்டு கொள்க.
 

சூ. 190:

உயர்திணை யாயின் நம்இடை வருமே

(18)
 
க-து :

எல்லாம் என்பது உயர்திணைப் பெயராயவழி எய்தும் முறைமை
கூறுகின்றது.
 

பொருள் :மேற்கூறிய எல்லாம் என்னும் பொதுப்பெயர்  உயர்திணைப்
பெயராக    வருமாயின்   ஆண்டு நம்முச்சாரியை இடையேவரும். உம்மை
இறுதிக்கண் வரும்.
 

எ-டு :எல்லாநம்மையும்      எல்லாநம்மொடும்    எனவரும்.    பிற
உருபுகளொடும் ஒட்டுக. எல்லா நம்மையும் என்பது எல்லேமையும் என்னும்
பொருள்பட வந்ததாகும்.
 

எல்லாநம்மையும்   என்பதற்கு   எல்லாரையும்  என்பது பொருள் என
நச்சினார்க்கினியர் உரையுள் காணப்படுகின்றது. அஃது  ஏடெழுதினோரான்
நேர்ந்த பிழையாகலாம்.
 

சூ. 191:

எல்லாரும் என்னும் படர்க்கை இறுதியும்

எல்லீரும் என்னும் முன்னிலை இறுதியும்

ஒற்றும் உகரமும் கெடுமென மொழிப

நிற்றல் வேண்டும் ரகரப் புள்ளி

உம்மை நிலையும் இறுதி யான

தம்இடை வரூஉம் படர்க்கை மேன

நும்இடை வரூஉம் முன்னிலை மொழிக்கே

(19)
 
க-து :

எல்லாரும்,  எல்லீரும்  என்னும்  பெயர்கள் உருபு வருங்கால்
எய்தும் முறைமை கூறுகின்றது.
 

பொருள் :எல்லாரும்   என்னும்      உயர்திணைப்     படர்க்கைப்
பெயரிறுதியும்,    எல்லீரும்    என்னும் முன்னிலைப் பெயரிறுதியும் உருபு
வருங்கால் ஒற்றும் அதன் மேல் நிற்கும் உகரமும் கெடும் என்றும் கூறுவர்.
அங்ஙனம் கெட்டவிடத்து ரகரம் புள்ளியாக நிற்கும். அவ்வழிப் படர்க்கைச்
சொல்லிடத்துத்     தம்முச்சாரியையும்    முன்னிலைச்     சொல்லிடத்து
நும்முச்சாரியையும் இடையே வரும்.   உருபினது   இறுதிக்கண்   உம்மை நிலைபெறும்.