நூன்மரபு209

எ-டு:எல்லார்தம்மையும்   எல்லீர்நும்மையும்    எனவரும்.  ஏனை
உருபுகளொடும் ஒட்டி, முற்கூறிய விளக்கங்களொடு கண்டு கொள்க.
 

‘‘நிற்றல் வேண்டும் ரகரப் புள்ளி’’ என்ற மிகையான் ஏனை  ரகரஈற்றுப்
படர்க்கைப்பெயர்,    முன்னிலைப்   பெயர்களுள் ஒரு   சாரனவற்றிற்கும்
இச்சாரியையும் உம்மையும் வருதல் கொள்க.
 

எ-டு:கரியார்தம்மையும்,     சான்றோர்    தம்மையும்     எனவும்;
கரியீர்நும்மையும், சான்றீர்நும்மையும் எனவும் வரும். இன்னும்  இதனானே
அவர்தம்மை, இவர்தம்மை என உம்மையின்றிச் சாரியை    மட்டும்பெற்று
வருதலும் எல்லாரையும், எல்லீரையும் எனச்    சாரியை   இன்றி உம்மை
மட்டும் பெற்று வருதலும் கொள்க.
 

இனிச்    சிறுபான்மை   கரியேம்நம்மையும், இருவேம்தம்மையும் எனத்
தன்மைப்பன்மைப்பெயர்     நம்முச்சாரியையும்      உம்மையும்  பெற்று
வருதலையும் எல்லாம் என்பது எல்லேம் எனத்திரிந்து தன்மைப்  பெயராய்
வருதலையும் புறனடையாற் கொள்க.
 

சூ. 192 :

தான்யான் என்னும் ஆயீ ரிறுதியும்

மேல்முப் பெயரொடும் வேறுபா டிலவே

(20)
 
க-து :

தன்மை ஒருமைப் பெயர்கள் உருபு வருங்கால் திரியுமாறு
கூறுகின்றது.
 

பொருள் :தான், யான் என்னும் தன்மைப் பெயர்களின் அவ்இரண்டு
ஈற்றுச் சொற்களும் மேலே தாம், நாம்,யாம் என்னும் பெயர்களுக்குக் கூறிய
விதிகளொடும் வேறுபாடிலவாகும்.
 

திரிபொன்றையே சுட்டியுணர ‘‘மேல்முப் பெயரொடும்’’ என்றார்.என்றது;
நாம், யாம் என்பவற்றிற்குரிய ஒருமைப் பெயராய யான்   என்பது,   யாம்
என்பது திரிந்தாற்போல ஆகாரம் எகரமாதலும் யகர மெய் கெடுதலும், தாம்
என்பதற்குரிய ஒருமைப் பெயராகிய தான் என்பது நெடுமுதல் குறுகித் தன்
என நிற்றலும் விதி என்றவாறு.
 

எ-டு:தன்னை, தன்னொடு, தனக்கு, தன்னின், தனது,தன்கண் எனவும்,
என்னை, என்னொடு, எனக்கு, என்னின், எனது, என்கண் எனவும் வரும்.
 

சூ. 193 :

அழனே புழனே ஆயிரு மொழிக்கும்

அத்தும் இன்னும் உறழத் தோன்றல்

ஒத்த தென்ப உணரு மோரே

(21)
 
க-து :

அழன் புழன் என்னும் சொற்கள் உருபொடு புணருமாறு
கூறுகின்றது.