பல், சில் என்பவை லகர ஈற்று அளவைப் பெயர்களாகும். இதனைப் பன்மை, சின்மை என்னும் சொல்லாக்கத்தானறியலாம். அவ்அளவைப் பெயர்கள் முழுமை உணர்த்தும் அகர ஈற்றொடு கூடிப் பல்ல, சில்ல எனவும் பல, சில எனவும் அஃறிணைப்பன்மைப் பெயர்களாக வரும், எனவே, உரையாசிரியன்மார் ஈண்டுமிகையுள் அடக்கியவை எல்லாம் புள்ளி மயங்கியலுள் கூறப்பெறும் லகர ஈற்று விதிகளுள் அடங்குமென்க. இவ்வாறு எடுத்தோத்துக்களான் முடியும் பல சொற்களைக் காலச்சூழலானும் திரிபுணர்ச்சியானும் உரையாசிரியன்மார் மிகையில்லாத இடத்தும் மிகையைக் கற்பித்து அடக்கியுள்ளமை இரங்கத்தக்கதாகும். |
சூ. 216 : | வேற்றுமைக் கண்ணும் அதனோ ரற்றே |
(14) |
க - து : | அகர ஈற்று வேற்றுமைப் புணர்ச்சி கூறுகின்றது. |
பொருள் : அகர ஈற்றுச் சொற்கள் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக் கண்ணும் (பின்னர் விதந்து கூறப்படுபவை தவிர்ந்த பிற எல்லாம்) மேல் அல்வழிப் புணர்ச்சிக்குக் கூறிய இலக்கணத்தொடு ஒத்த தன்மைத்தேயாம். அஃதாவது; கசதபக்கள் வரின் மிக்குப்புணரும் என்றவாறு. |
எ. டு: இருவிளக்கொற்றன், சாத்தன், தேவன், பூதன் எனவரும். இருவிள என்பது ஓர் ஊர்ப்பெயர்; இருவிளவின்கண் வாழும் கொற்றன் என்பது பொருள். |
சூ. 217: | மரப்பெயர்க் கிளவிக்கு மெல்லெழுத்து மிகுமே |
(15) |
க - து : | ஒருசார் அகர ஈற்று மரப்பெயர்க்குச் சிறப்பு விதி கூறுகின்றது. |
பொருள்: மரப்பெயராக வரும் அகர ஈற்றுச் சொற்களுக்கு (வல்லெழுத்தின் கிளையாகிய) மெல்லெழுத்து மிகும். |
எ. டு : விளங்கோடு-அதங்கோடு, செதிள், தோல், பூ எனவரும். |
சூ. 218 : | மகப்பெயர்க் கிளவிக்கு இன்னே சாரியை |
(16) |
க - து : | மக என்னும் சொல்லிற்குச் சிறப்பு விதி கூறுகின்றது. |
பொருள்: மக என்னும் பெயராகிய அகர ஈற்றுச் சொல்லிற்கு இன்சாரியை இடையே வரும். |
எ. டு: மகவின்கை - செவி, தலை, புறம் எனவரும். இது வருமொழி வரையாது நிலைமொழிச் செய்கை கூறினமையின் ஏனைக் கணம்வரினும் சாரியைப்பேறு கொள்க. |