நூன்மரபு230

யா  என்னும்   வினாப்     பெயரை    நீக்குதற்காக   யாமரக்கிளவியும்
என்றார்.  உம்மையான்  ஏனையவும்   மரப்பெயர்கள்   என்பதைப்  பெற
வைத்தார்.
 

சூ. 230 :

வல்லெழுத்து மிகினும் மான மில்லை 

(28)
 
க - து:

மேலனவற்றிற்குப்           புறனடை           கூறுகின்றது.
 

பொருள் : மேற்கூறிய   மரப்பெயர்     மூன்றற்கும்    வல்லெழுத்து
மிக்குவரினும் குற்றமில்லை.
 

எ. டு : யாஅக்கோடு;    பிடாஅக்கோடு;  தளாஅக்கோடு,    செதிள்,
தோல், பூ எனவரும்.   இழிவுசிறப்பும்மையான்   வலிமிகுதல்  சிறுபான்மை
எனக் கொள்க.
 

இனி, யாஅத்துக்கோடு,   பிடாஅத்துக்கோடு,   தளாஅத்துக்கோடு என
அத்துப் பெறுதலும் கொள்க என்பார் நச்சினார்க்கினியர்.  உருபிற்கு  ஓதிய
சாரியைகள் ஒல்லும் வழியெல்லாம் பொருட்கும்  வரும் என்பது  ஆசிரியர்
கருத்தாகலின்,   அஆ   என்னும்   மரப்   பெயர்க்  கிளவிக்கு (சூ. 182)
என்பதனான்   அத்துச்சாரியை    வருதல்    அமையுமாகலின்    ஈண்டு
மிகைப்படுத்து   அடக்க   வேண்டாமையறிக.   மேல்  வருவனவற்றிற்கும்
இவ்விளக்கம் ஒக்கும்.
 

சூ. 231 :

மாமரக் கிளவியும் ஆவும் மாவும் 

ஆமுப் பெயரும் அவற்றோ ரன்ன 

அகரம் வல்லெழுத் தவையவண் நிலையா 

னகரம் ஒற்றும் ஆவும் மாவும் 

(29)
 
க - து:

ஆகார  ஈற்று   ஓரெழுத்தொருமொழி மூன்றற்குச்  சிறப்பு விதி
கூறுகின்றது.
 

பொருள்: மா   என்னும்   மரத்தை   உணர்த்தும் பெயரும் ஆ, மா
என்னும் விலங்கை உணர்த்தும்  பெயர்களுமாகிய   அம்மூன்று   பெயரும்
மேற்கூறிய யாமரக்கிளவி முதலியவற்றொடு   ஒத்ததொரு  தன்மையவாகும்.
எனினும் அவற்றிற்கு   ஓதப்பெற்ற   அகரந்   தோன்றுதல்  வல்லெழுத்து
மிகுதலாகியவை   அவ்விடத்து   நிலைபெறா.   (மெல்லெழுத்து  மட்டுமே
மிகும்) அவற்றுள் ஆவும் மாவும் ஆகிய விலங்குப் பெயர்கள் னகர ஒற்றுப்
பெற்று நிற்கும்.
 

எ. டு:  மாங்கொம்பு,   செறும்பு,  தளிர்,  பூ   எனவும்  ஆன்கோடு;
மான்கோடு, செவி, தலை, புறம் எனவும் வரும்.