ஏனைய அளவுப்பெயர் தம்முன்தாம் வருங்கால் மிகுதலும் கொள்க. எ.டு தொடித்தொடி - காணிக்காணி எனவரும். |
உரையாசிரியன்மார் அடையடுத்துவரினும் பிறபொருட்பெயர் வரினும் இவ்விதி கொள்க என்பார். அடையெடுப்பினும் புணர்வது இகர ஈறேயாதலின் அதுவேண்டா கூறலாம். ஏனைய பொருட்பெயர்வரின் அது பொதுவிதியுள் அடங்குமாதலின் மிகையின்கண்படுத்தல் வேண்டாவாம். மேலும் அவர் தூணிக்குத்தூணி என இக்குச் சாரியை பெறுதலும் கொள்க என்பார். அது நாளுக்குநாள் என்றார் போலத் தொறுவென்னும் பொருள்பட நின்ற இடைச்சொல்லாகலின் சாரியை எனற்கேலாமையறிக. |
சூ. 240 : | உரிவரு காலை நாழிக் கிளவி |
| இறுதி இகரம் மெய்யொடுங் கெடுமே |
| டகரம் ஒற்றும் ஆவ யினான |
(38) |
க - து: | இதுவுமது. |
பொருள் : உரி என்னும் அளவைப் பெயர் வருமொழியாக வருமிடத்து நாழி என்னும் சொல்லின் இறுதி இகரம் தான் ஊர்ந்து நின்ற மெய்யொடும் கெடும்; அவ்விடத்து ஒருடகர ஒற்றுத் தோன்றி நிற்கும். தோன்றிய ஒற்றை மெய்யாக்கிக் கொண்டு உகரம் ஏறிப் புணருமென்க. |
எ. டு: நாழி + உரி = நாடுரி எனவரும் (நாட் + உரி = நாடுரி) ‘இறுதி இகரம்’ என்றதனான் நாழியுரி எனக்கெடாது பொதுவிதியாற் புணர்தலுமாம். இங்ஙனம் இயல்பாயும் புணர்தலான் இதனை மரூஉவினுள் அடக்காமல் விதி கூறினார் என்க. |
இச்சூத்திரத்து உரையாசிரியன்மார் மிகையான் அமைக்கும் முடிபுகள் பொதுவிதியான் அமையுமாகலின் அவை வேண்டா கூறலாமென அறிக. |
சூ. 241 : | பனிஎன வரூஉம் கால வேற்றுமைக்கு |
| அத்தும் இன்னும் சாரியை யாகும் |
(39) |
க - து: | பனி என்னும் சொற்குச் சிறப்பு விதி கூறுகின்றது. |
பொருள்: நோயை உணர்த்தாமல் பருவகாலமுணர்த்தி வரும் பனி என்னும் சொல்லுக்கு அத்தும் இன்னும் சாரியையாக வரும். |