இனி, உதியங்கோடு என அம்முப்பெறுதல் இடைக்கால வழக்காதலான் அதனைப் புறனடையாற் கொள்ளல் தகும். |
சூ. 244 : | புளிமரக் கிளவிக்கு அம்மே சாரியை |
(42) |
க - து: | புளி என்னும் மரப்பெயர்க்குச் சிறப்பு விதி கூறுகின்றது. |
பொருள் : புளி என்னும் மரப்பெயர்ச் சொல்லுக்கு அம்முச்சாரியையாகும். எ. டு: புளியங்கோடு, செதிள், தோல், பழம் எனவரும். |
புளி என்பது ஆகுபெயராய் மரத்தை உணர்த்தலன்றிப் பல பொருளொருசொல் அன்மையான், சுவையன்றிப் புளி என்னும் மரத்தை உணர்த்தும் சொல் என நச்சினார்க்கினியர் கூறுதல் ஏலாதென்க. ‘புளிங்காய்’ (ஐங்-51) என்பது செய்யுள் விகாரமென அறிக. |
சூ. 245 : | ஏனைப் புளிப்பெயர் மெல்லெழுத்து மிகுமே |
(43) |
க - து: | புளி என்னும் சுவைப் பெயர்க்குப் பிறிது விதி கூறுகின்றது. |
பொருள்: ஆகுபெயராய் மரத்தை உணர்த்தும் சொல்லன்றி இயற்பெயராகச் சுவையை உணர்த்தும் ஏனையதாகிய புளி என்னும் பெயர் மெல்லெழுத்து மிகும். |
எ.டு: புளிங்கூழ், புளிஞ்சோறு, புளிந்தயிர், புளிம்பாளிதம் எனவரும். |
சூ. 246 : | வல்லெழுத்து மிகினும் மான மில்லை |
| ஒல்வழி யறிதல் வழக்கத் தான |
(44) |
க - து: | சுவைப் பெயர்க்கு எய்தியதன் மேற்சிறப்பு விதி கூறுகின்றது. |
பொருள் : மேற்கூறிய சுவைப்புளிக்கு மெல்லெழுத்தேயன்றி வல்லெழுத்து மிகினும் குற்றமில்லை. வழக்கின்கண் அவ்வாறு வருமிடமறிந்து கொள்க. |
எ.டு: புளிக்கறி, புளிச்சோறு, புளித்துவையல், புளிப்பாகர் எனவரும். ‘‘ஒல்வழியறிதல் வழக்கத்தான’’ என்றதனான் கணவிரி-கூதாளி முதலியவை அம்முப்பெற்று இகரங்கெட்டு, கணவிரங்கோடு, கூதாளங்கோடு எனவும் கூதாளி என்பது அத்துப் பெற்றுக் கூதாளத்துத் தண்பூங்கோதையர் எனவருதலும் கொள்க. இனிக், கட்டிடி - கட்டகல் என்பவை மரூஉவாதலின் புறனடையாற் கொள்க. |