நூன்மரபு254

அஃதாவது; ஒத்தமெல்லெழுத்து  மிக்குப்புணரும் என்றவாறு. விசைமரக்
கிளவியொடு  ஒப்பக் கூறினமையின்  ஞெமை, நமை என்பவை மரப்பெயர்
என்பது பெற்றாம்.
 

எ. டு:விசைங்கோடு; ஞெமைங்கோடு; நமைங்கோடு, செதிள், தோல், பூ
எனவரும்.
 

ஒன்றென முடித்தல்; தன்னின  முடித்தல்  என்பதனான்  உழை, அமை, உடை என்னும் மரப்பெயர்களுக்கும் இவ்விதி கொள்க.
 

எ.டு :உழைங்கோடு;  அமைங்கோடு; உடைங்கோடு,  செதிள், தோல்,
பூ எனவரும்.
 

சூ. 283 :

பனையும் அரையும் ஆவிரைக் கிளவியும்

நினையுங் காலை அம்மொடு சிவணும்

ஐயென் இறுதி அரைவரைந்து கெடுமே

மெய்யவண் ஒழிய என்மனார் புலவர் 

(81)
 

க-து :

ஐகார ஈற்று மரப்பெயர்ச் சிலவற்றிற்கு வேறுவிதி கூறுகின்றது.
 

பொருள்:ஐகார  ஈற்று  மரப்பெயர்ச்  சொற்களை  ஆராயுமிடத்துப்,
பனை  என்னும்  சொல்லும், அரை என்னும் சொல்லும், ஆவிரை என்னும்
சொல்லும்  அம்முச்சாரியையொடு  பொருந்திப்  புணரும்;  ஆண்டு இறுதி
ஐகாரம்  அரை  என்னும்  சொல்லைத் தவிர்த்து ஏனை இரண்டிலும் தான்
ஊர்ந்து  நின்றமெய்  கெடுதலைத்  தவிர்த்துத்தான் மட்டும் கெடும் என்று
கூறுவர் புலவர்.
 

எ.டு:பனங்காய்,  செதிள்,  தோல், பூ எனவும் ஆவிரங்கோடு, செதிள்,
தோல், பூ எனவும் அரையங்கோடு, செதிள், தோல், பூ எனவும் வரும்.
 

‘‘நினையுங்காலை’’     என்றதனான்   தில்லை,   தாழை    என்னும்
மரப்பெயர்களும்  இறுதி  ஐகாரங்கெட்டு  அம்முப்பெறுதல் கொள்க. எ.டு:
தில்லங்காய், செதிள், தோல், பூ- தாழங்காய், செதிள், தோல், பூ எனவரும்.
தூதுளை,  வழுதுணை,  ஓலை  முதலியன  மரப்பெயர்கள் அல்லவாதலின்
அவை அம்முப் பெறுதல் புறனடையாற் கொள்ளல்தகும்.
 

சூ. 284 :

பனையின் முன்னர் அட்டுவரு காலை

நிலையின் றாகும் ஐயென் உயிரே

ஆகாரம் வருதல் ஆவயி னான 

(82)
 

க-து :
 

பனை  என்னும்  சொல்,  வருமொழி  அட்டு   என்பதனொடு
புணருமாறு கூறுகின்றது.