பொருள் :பனை என்னும் மரப்பெயர்ச் சொல்லின் முன்னர் அட்டு என்பது வருமிடத்து, இறுதி ஐகாரம் நிலைபெறுதல் இன்றாகும்; அவ்விடத்து ஓர் ஆகாரம் தோன்றி வருதலாகும். |
எ. டு:பனை + அட்டு (பன்+ஆ+அட்டு) பனாஅட்டு எனவரும். ஐகாரம் கெடும் என்னாமல் நிலையின்றாகும் என்றதனான் பனையட்டு எனப் பொதுவிதி பெற்று வருதலும் கொள்க. |
இனி ‘‘ஆவயினான’’ என்பதனான் ஓராநயம், விச்சாவாதி, கேட்டாமூலம், பாறாங்கல் என்னும் அல்வழி முடிபுங்கொள்க என்பார் நச்சினார்க்கினியர். |
இவற்றுள் ஓரா, விச்சா என்பவை இயல்பீறாகவே கொள்ளப்படுதலானும், கேட்டா மூலம் என்பது சான்றோர் வழக்கன்றாதலானும் அவற்றை ஈண்டு அடக்குதல் வேண்டாவாம். பாறாங்கல், கூழாங்கல் என்பவை பண்புபற்றி, ஒருசொற் புணர்ச்சியாய் நிற்பவையாகலான் அவற்றை நிலைமொழி வருமொழி செய்து புணர்த்தல் வேண்டாவாம். |
சூ. 285 : | கொடிமுன் வரினே ஐஅவண் நிற்பக் |
| கடிநிலை யின்றே வல்லெழுத்து மிகுதி |
(83) |
க-து : | பனை என்பதன்முன் கொடி என்னும் சொல்வரின், எய்தியது விலக்கிப் பொதுவிதி பெறும் என்கின்றது. |
|
பொருள் :(அதிகாரத்தால் நின்ற) பனை என்னும் சொல்லின்முன் கொடி என்னும் சொல்வரின், ஐகாரம் கெடாது நிற்ப வல்லெழுத்து மிகுதல் நீக்கும் நிலைமைத்தன்று. |
எ. டு:பனைக்கொடி எனவரும். பனையை எழுதிய கொடி என்பது பொருள். பனைமரத்திற்குக் கொடியின்மையின் இவ்விதி விதந்து கூறப்பட்டது. |
‘‘அவண்நிற்ப’’ என்றதனான் பனையின்முன் திரள் என்னும் சொல்வரின் பனைத்திரள் - பனந்திரள் என உறழ்ந்து வருதல்கொள்க. மெலிமிகும் என ஆசிரியர் கூறாமையின் பனைந்திரள் எனக்காட்டுவது பொருந்தாதென்க. |