நூன்மரபு255

பொருள் :பனை  என்னும்  மரப்பெயர்ச்  சொல்லின்  முன்னர் அட்டு
என்பது வருமிடத்து, இறுதி ஐகாரம் நிலைபெறுதல் இன்றாகும்; அவ்விடத்து
ஓர் ஆகாரம் தோன்றி வருதலாகும்.
 

எ. டு:பனை + அட்டு (பன்+ஆ+அட்டு)  பனாஅட்டு எனவரும். ஐகாரம்
கெடும்   என்னாமல்   நிலையின்றாகும்  என்றதனான்  பனையட்டு எனப்
பொதுவிதி பெற்று வருதலும் கொள்க.
 

இனி ‘‘ஆவயினான’’ என்பதனான் ஓராநயம், விச்சாவாதி, கேட்டாமூலம்,
பாறாங்கல் என்னும் அல்வழி முடிபுங்கொள்க என்பார் நச்சினார்க்கினியர்.
 

இவற்றுள் ஓரா, விச்சா என்பவை இயல்பீறாகவே கொள்ளப்படுதலானும்,
கேட்டா மூலம் என்பது  சான்றோர் வழக்கன்றாதலானும் அவற்றை ஈண்டு
அடக்குதல்  வேண்டாவாம். பாறாங்கல், கூழாங்கல் என்பவை  பண்புபற்றி,
ஒருசொற்  புணர்ச்சியாய்   நிற்பவையாகலான்   அவற்றை   நிலைமொழி
வருமொழி செய்து புணர்த்தல் வேண்டாவாம்.
 

சூ. 285 :

கொடிமுன் வரினே ஐஅவண் நிற்பக்

கடிநிலை யின்றே வல்லெழுத்து மிகுதி 

(83)
 

க-து :
 

பனை  என்பதன்முன்  கொடி என்னும் சொல்வரின், எய்தியது
விலக்கிப் பொதுவிதி பெறும் என்கின்றது.
 

பொருள் :(அதிகாரத்தால்  நின்ற)  பனை  என்னும்  சொல்லின்முன்
கொடி என்னும் சொல்வரின், ஐகாரம் கெடாது  நிற்ப வல்லெழுத்து மிகுதல்
நீக்கும் நிலைமைத்தன்று.
 

எ. டு:பனைக்கொடி  எனவரும்.  பனையை  எழுதிய  கொடி என்பது
பொருள்.   பனைமரத்திற்குக்   கொடியின்மையின்   இவ்விதி    விதந்து
கூறப்பட்டது.
 

‘‘அவண்நிற்ப’’ என்றதனான் பனையின்முன் திரள் என்னும் சொல்வரின்
பனைத்திரள் - பனந்திரள் என உறழ்ந்து வருதல்கொள்க. மெலிமிகும் என
ஆசிரியர் கூறாமையின் பனைந்திரள் எனக்காட்டுவது பொருந்தாதென்க.
 

சூ. 286 :

திங்களும் நாளும் முந்துகிளந் தன்ன(84)
 

க-து :

ஐகார   ஈற்றுத்  திங்கட்   பெயரும்  நாட்பெயரும்   புணருமாறு
கூறுகின்றது.