க-து : | மழையென்னும் சொற்குச் சிறப்பு விதி கூறுகின்றது. |
|
பொருள் :மழை என்னும் சொல் வளியென்னும் சொல்லியல் பிற்றாய் அத்துச் சாரியையும் இன்சாரியையும் பெறும். |
எ. டு:மழையத்துக் கொண்டான், மழையிற் கொண்டான், சென்றான், தந்தான், போயினான் எனவரும். வருமொழி வரையாது கூறினமையின் மழையத்து ஞான்றான், வந்தான், அடைந்தான் என இயல்புகணத்தொடு வருதலும் கொள்க. |
“திங்களை முற்கூறிய முறையன்றிக் கூற்றினான்’’ எனமிகை கொண்டு நச்சினார்க்கினியர் கூறும் சில சொல்முடிபுகள் ஈண்டைக்கு ஏற்பன அல்ல. அவற்றுள் பல பொதுவிதியுள் அடங்கும். சில புறனடையாற் கொள்ளத் தக்கவையாம். |
சூ. 288 : | செய்யுள் மருங்கின் வேட்கை என்னும் |
| ஐயென் இறுதி அவாமுன் வரினே |
| மெய்யொடுங் கெடுதல் என்மனார் புலவர் |
| டகாரம் ணகாரம் ஆதல் வேண்டும் |
(86) |
க-து : | வேட்கை என்னும் சொற்குச் செய்யுள் வழக்காகிய முடிவு கூறுகின்றது. |
|
பொருள் :செய்யுள் வழக்கின்கண் வேட்கை என்னும் சொல்லிறுதியாகிய ஐகாரம், அவா என்னும் சொல் வருமொழியாக வரின் தான் ஊர்ந்து நின்ற மெய்யொடும் கெடும். ஆண்டு நின்ற டகாரம் ணகாரமாகத் திரிதல் வேண்டும். |
எ. டு:வேட்கை+அவா = வேணவா. “வேணவா நலிய வெய்ய உயிரா” (நற் - 61) எனவரும். வேட்கையான் எழுந்த அவா என்பது பொருள். வேட்கையவா எனப் பொதுவிதியாற் புணரின் அல்வழியாம். வேட்கையாகிய அவா என்பது பொருள். வேட்கை என்பது வேண் எனத் திரிதற்கு வருமொழி காரணமாகாமையின் செய்யுள் வழக்காயிற்றென உணர்க. |