பொருள் :ஒளகார ஈற்றுப் பெயர்கள், தம்முன்னர் அல்வழியின் கண்ணும் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக் கண்ணும் வல்லெழுத்து வரின், மிக்குப்புணர்தல் நீக்கும் நிலையின்று. அவ் இருகூற்றுச் சொற்கண்ணும் ஓர் உகரம் வருதல் செம்மையானது எனக் கூறுவர் இலக்கணத்திற் சிறந்தோர். |
‘கவவொடு இயையின் ஒளவு மாகும்’ (மொழி - 37) என வரையறுக்கப்பெற்றமையான் ‘‘அவ்விரு ஈற்றும்’’ எனக்கூறினார் வழுவாமை பற்றி என்க. அவ்விரு என்பது அல்வழி, வேற்றுமைகளை எனலுமாம். |
எ.டு :அல்வழிக்கண் கௌவுக்கடிது; வௌவுக்கடிது, சிறிது, தீது, பெரிது எனவரும். வேற்றுமைக்கண் கௌவுக்கடுமை, வௌவுக்கடுமை, சிறுமை, தீமை, பெருமை எனவரும். உடம்படுமெய் பெறாமல் கௌஉக்கடிது, வௌஉக்கடிது என வருதலும் ஒக்கும். ‘‘செவ்விது’’ என்றதனான் உகரப்பேறு இயல்புகணத்து வரினும் கொள்க. |
எ.டு :கௌவுஞெமிர்ந்தது, கௌஉஞெமிர்ச்சி எனவரும். |
உயிர் மயங்கியல் முற்றியது |
8. புள்ளிமயங்கியல் |
புள்ளி எழுத்துக்கள் பெயர் முதலிய நால்வகைச் சொற்களிலும் இறுதியாக நின்று இருவழியும் நாற்கணத்தொடும் புணரும் இயல்புணர்த்தலின் இவ்வோத்துப் புள்ளிமயங்கியல் என்னும் பெயர்த்தாயிற்று. |
“மெய்யே உயிரென் றாயீ ரியல’’ எனப்பட்டவற்றுள் மெய்யீறு புணருங்கால் அஃது ஒலிப்புடையதாகிப் புணரும் என்பதை ‘‘மெய்யீ றெல்லாம் புள்ளியொடு நிலையல்’’ என உணர்த்தினமையின், மெய்ம்மயங்கியல் என்னாது புள்ளிமயங்கியல் என்றார். |
‘‘உயிரிறு சொல்முன் உயிர்வரு வழியும்’’ (புண-5) என்னும் சூத்திரத்துள் நிறுத்தமுறையாற் கூறுதலின் இவ்வியல் உயிர் மயங்கியலொடு இயைபுடைத்தாயிற்று. |