நூன்மரபு259

பொருள் :ஒளகார   ஈற்றுப்  பெயர்கள்,  தம்முன்னர்  அல்வழியின்
கண்ணும் வேற்றுமைப்  பொருட்புணர்ச்சிக்  கண்ணும் வல்லெழுத்து வரின்,
மிக்குப்புணர்தல் நீக்கும் நிலையின்று. அவ் இருகூற்றுச் சொற்கண்ணும் ஓர்
உகரம் வருதல் செம்மையானது எனக் கூறுவர் இலக்கணத்திற் சிறந்தோர்.
 

‘கவவொடு     இயையின்   ஒளவு   மாகும்’   (மொழி - 37)   என
வரையறுக்கப்பெற்றமையான் ‘‘அவ்விரு ஈற்றும்’’ எனக்கூறினார் வழுவாமை
பற்றி என்க. அவ்விரு என்பது அல்வழி, வேற்றுமைகளை எனலுமாம்.
 

எ.டு :அல்வழிக்கண் கௌவுக்கடிது; வௌவுக்கடிது, சிறிது, தீது, பெரிது
எனவரும்.  வேற்றுமைக்கண்   கௌவுக்கடுமை, வௌவுக்கடுமை,  சிறுமை,
தீமை,  பெருமை  எனவரும்.   உடம்படுமெய்   பெறாமல்  கௌஉக்கடிது,
வௌஉக்கடிது   என   வருதலும்   ஒக்கும்.  ‘‘செவ்விது’’   என்றதனான்
உகரப்பேறு இயல்புகணத்து வரினும் கொள்க.
 

எ.டு :கௌவுஞெமிர்ந்தது, கௌஉஞெமிர்ச்சி எனவரும்.
 

உயிர் மயங்கியல் முற்றியது

 

8. புள்ளிமயங்கியல்
 

புள்ளி   எழுத்துக்கள்  பெயர்  முதலிய  நால்வகைச்   சொற்களிலும்
இறுதியாக     நின்று     இருவழியும்     நாற்கணத்தொடும்   புணரும்
இயல்புணர்த்தலின்     இவ்வோத்துப்     புள்ளிமயங்கியல்     என்னும்
பெயர்த்தாயிற்று.
 

“மெய்யே   உயிரென்   றாயீ   ரியல’’   எனப்பட்டவற்றுள் மெய்யீறு
புணருங்கால்   அஃது  ஒலிப்புடையதாகிப்  புணரும்   என்பதை ‘‘மெய்யீ
றெல்லாம்    புள்ளியொடு     நிலையல்’’   என    உணர்த்தினமையின்,
மெய்ம்மயங்கியல் என்னாது புள்ளிமயங்கியல் என்றார்.
 

‘‘உயிரிறு சொல்முன் உயிர்வரு வழியும்’’ (புண-5) என்னும் சூத்திரத்துள்
நிறுத்தமுறையாற்    கூறுதலின்   இவ்வியல்     உயிர்   மயங்கியலொடு
இயைபுடைத்தாயிற்று.