நூன்மரபு260

புள்ளியீற்றின்முன் உயிர்முதன் மொழிவரின் எய்தும் இலக்கணம் பற்றிப்
பொதுவகையான்   புணரியலுள்ளும்  (புண - 35)  தொகை  மரபினுள்ளும்
(தொகை - 18)   பெறப்படுதலின்  ஈண்டுப்  புள்ளியீறு நின்று உயிர்மெய்ம்
முதன்மொழிகளொடு புணருமாறு பற்றி முதற்கண் கூறத் தொடங்குகின்றார்.
 

சூ. 296 :

ஞகாரை ஒற்றிய தொழிற்பெயர் முன்னர்

அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும்

வல்லெழுத் தியையின் அவ்வெழுத்து மிகுமே

உகரம் வருதல் ஆவயி னான 

(1)
 

க-து : 

ஞகார ஈறு இருவழியும் வன்கணத்தொடு புணருமாறு கூறுகின்றது.
 

பொருள்:ஞகாரத்தை  ஈறாக  உடைய  முதனிலைத்  தொழிற்பெயர்,
அல்வழியைச் சொல்லுமிடத்தும் வேற்றுமைப்  பொருட்புணர்ச்சிக் கண்ணும்,
தன்முன்னர் வல்லெழுத்து வந்து புணரின் அவ்வெழுத்துமிகும், அவ்விடத்து
நிலைமொழிக்கண் ஓர் உகரம் வருதலைச் செய்யும்.
 

எ. டு:உரிஞுக்கடிது,  சிறிது,  தீது,  பெரிது எனவரும். இவை அல்வழி,
உரிஞுக் கடுமை, சிறுமை, தீமை, பெருமை எனவரும். இவை வேற்றுமை.
 

சூ. 297 :

ஞநமவ இயையினும் உகரம் நிலையும்(2)
 

க-து :

ஞகர     ஈற்றுத்       தொழிற்பெயர்      மென்கணத்தொடும்
இடைக்கணத்தொடும் புணருமாறு கூறுகின்றது.
 

பொருள் :மேற்கூறிய ஞகர ஈற்றுத் தொழிற்பெயர், வன்கணமேயன்றி
ஞநமவ என்பவற்றை முதலாக உடைய சொற்கள் வந்து இயையினும் உகரம்
வந்து நிலைபெறும்.
 

எ. டு:உரிஞு  ஞான்றது,  நீண்டது, மாண்டது, வலிது எனவும்; ஞாற்சி,
நீட்சி, மாட்சி, வன்மை எனவும் வரும். யகரத்தொடும் உயிர்க்கணத்தொடும்
புணருமாறு   தொகைமரபினுள்  பெறப்படுதலின்  ‘ஞநமவ’   எனவிதந்து
கூறினார்.
 

சூ. 298 :

நகர இறுதியும் அதனோ ரற்றே(3)
 

க-து : 

நகர ஈற்றுச்சொற்களும் மேற்கூறியாங்குப் புணருமென்கின்றது.
 

பொருள் :நகர  ஈற்றுச்   சொல்லிறுதியும்  மேற்கூறிய  ஞகர  ஈற்று
விதியொடு ஒருதன்மைத்தாம்.