நூன்மரபு263

யாதலின்  அவை  அப்பொதுச்  சூத்திரத்துள்  அடங்குமென்க. ஆண்மை,
பெண்மை  என்னும்  பண்புகள் உயர்திணைக்குரியவை என்பதைக் ‘குடிமை
ஆண்மை இளமை மூப்பே’ (கிளவி-57) என்னும் சூத்திரத்தானறிக.
 

இவற்றின் அல்வழி முடிபு ‘‘மொழிமுத லாகும்’’ (தொகை-5) என்பதனுள்
அடங்கும். எ.டு: ஆண்கற்றான், பெண்கற்றாள் எனவரும். பிறவும் அன்ன.
 

சூ. 304 :

ஆண்மரக் கிளவி அரைமர இயற்றே (9)
 

க-து :

ஆண் என்னும் மரப் பெயர்க்குச் சிறப்பு விதி கூறுகின்றது.
 

பொருள்:‘ஆண்’ என்னும் மரத்தை உணர்த்தும் சொல் அரை என்னும்
மரப்பெயரியல்பிற்றாய் அம்முச்சாரியை பெற்றுப் புணரும்.
 

எ. டு:ஆணங்கோடு, செதிள், தோல், பூ எனவரும்.
 

சாரியைப்பேறு   வருமொழி    வரையாது    கூறினமையின்   இயல்பு
கணத்துங்கொள்க.    அவ்வழிச்    சாரியை   மகரம்   (சூ. 310)   பொது
விதியாற்கெடுமென  அறிக.  எ.டு:  ஆணநார்,  ஆணவேர்,  ஆணவெழில்
எனவரும்.
 

சூ. 305 :

விண்ணென வரூஉம் காயப் பெயர்வயின்

உண்மையும் உரித்தே அத்தென் சாரியை

செய்யுள் மருங்கின் தொழில்வரு காலை
(10)
 

க-து:

விண் என்னும் சொற்குச் சிறப்பு விதி கூறுகின்றது.
 

பொருள் :  விண்  ணென்னும்  குறிப்பன்றி  ஆகாயத்தை  உணர்த்தி
வரும்    சொல்லின்கண்,    செய்யுள்   வழக்கிடத்து   அத்து   என்னும்
சாரியை உளதாதலும் உரியதாகும்.
 

செஞ்சுடரின்   வெப்பத்தால்   காய்கின்ற   இடமாதலின்   (காய்+அம்)
விண்வெளிக்குக்  காயம்  என்பது  காரணப்  பெயர்.  அஃது வியப்பையும்
பரப்பையும்    உணர்த்தும்    ஆ   என்னும்   உரிச்சொல்லொடு   கூடி
‘‘ஆகாயம்’’ என வழங்கும். இது தமிழ்ச்சொல்.
 

எ. டு:   விண்ணத்துக்    கொட்கும்,    சுழலும்,   திரியும்,   பரவும்
எனவரும்.  ஏனைக்கணத்தும்  விண்ணத்து  நிலவும்,  வளரும்,  இயங்கும்
எனவரும்.