நூன்மரபு265

உரையாசிரியன்மார்  இச்சூத்திரத்துமிகையான்  மண்ணப்பந்தம், எண்ண
நோலை  எனப்பிற  பெயர்கள்  அகரச்சாரியை  பெறுதலையும் கவண்கால்,
பரண்கால்  என  வேற்றுமைக்கண்  திரியாது  வருதலையும் உருபு ணகரம்
திரிதலையும் அடக்குவர்.
 

ஆசிரியர்  கிளைப்பெயரெல்லாம்  என   விதந்து   கூறியுள்ளமையான்
அகரச்சாரியை     பெறுதலையும்   வேற்றுமைக்கண்    இயல்பாதலையும்
புறனடையாற்   கொள்ளல்   நேரிதாம்.  உருபு  திரிதல் எடுத்தோத்தானே
அமையும் எனமேல் விளக்கப்பட்டது.
 

சூ. 308 :

வேற்றுமை யல்வழி எண்ணென் உணவுப்பெயர்

வேற்றுமை இயற்கை நிலையலும் உரித்தே

(13)
  

க-து : 

எண்(எள்) என்னும் பெயர்க்காவதோர் மரபு கூறுகின்றது.
 

பொருள் :எண்  என்னும்  உணவுப்பொருளை  உணர்த்தும்  பெயர்,
அல்வழியாற்  புணருமிடத்து  வேற்றுமைக்குரிய இலக்கணத்தொடு நிற்றலும்
உரித்தாகும்.
 

எ. டு:எட்கடிது, சிறிது, தீது, பெரிது எனவரும். உம்மையால் எண்
கடிது என இயல்பாக வருதலும் ஆம்.
 

சூ. 309 :

முரண்என் தொழிற்பெயர் முதலியல் நிலையும்(14)
 

க-து :

முரண் என்னும் தொழிற்பெயர் புணருமாறு கூறுகின்றது.
 

பொருள் :பண்பை உணர்த்தாமல் தொழிலை உணர்த்தி வரும் முரண்
என்னும்  தொழிற்பெயர் பொதுவிதியாக  முன்னர்க் கூறிய இலக்கணத்தான்
நிலைபெறும்.   என்றது;  அல்வழிக்கண்   இயல்பாயும்   வேற்றுமைக்கண்
டகரமாகத் திரிந்தும் நிற்கும் என்றவாறு.
 

எ.டு :முரண்   கடிது,  சிறிது,   தீது,  பெரிது  என   அல்வழியிலும்
முரட்கடுமை,   சிறுமை,  தீமை,  பெருமை  என  வேற்றுமையிலும் வரும்.
தொழிற்பெயராயினும் இச்சொல் உகரம் பெறாது வரும் என்பது கருத்து.
 

முரண்  என்னும்   சொல்,  இருளும்  ஒளியும்  தம்முள்  முரணாகும்:
என்புழிப்பண்பாயும்  மன்னர்  தம்முள்  முரணிப் போரிட்டனர்: என்புழித்
தொழிலாயும்  நின்றவாறு  காண்க.  இதனைத்  ‘‘தொழிற்பெய  ரெல்லாம்’’
(சூ. 306) என்பதன்  பின்வையாது ஈண்டு வைத்தார். முரண் கடுமை எனத்
திரியாத  வழி  நிலைமொழி  பண்புப்பெயர்  எனவும்  முரட்கடுமை எனத்
திரிந்த வழி நிலைமொழி தொழிற் பெயரெனவும் தெரிந்துகோடற் கொள்க.