நூன்மரபு269

அகஞ்செவி  என்பது  அஞ்செவி  என  வருதலும்  கொள்க  என்பார்
உரையாசிரியர்.  அகச்செவி  என்பதே  மரபாகலானும்  அஞ்செவி என்பது
அழகிய  செவி  என்னும்   பொருள்படுமாகலானும்  அதனை   மிகையுள்
அடக்குதல்   வேண்டா  என்க.   அகத்ததாகிய  செவி எனின், அதனைப்
புறனடையாற் கொள்க.
 

சூ. 316 :

இலமென் கிளவிக்குப் படுவரு காலை

நிலையலும் உரித்தே செய்யு ளான 

(21)
 

க-து : 

‘இலம்பாடு’ என்னும் உரிச்சொல் ஈறு (விகுதி) கெட்டு ஒரோவழிப்
‘படு’  என்னும்  தொழிற்  சொல்லொடு  புணரும் செய்யுள் மரபு
கூறுகின்றது.
 

பொருள :வறுமை  என்னும்   பொருளினதாகிய   ஈறுகெட்ட ‘இலம்’
என்னும்   உரிச்சொற்குமுன்   படு   என்னும்  முதனிலைத் தொழிற்சொல்
வருமிடத்துச்,  செய்யுள்   வழக்கின்கண்  பொதுவிதியான்  மகர   ஒற்றுக்
கெடாது நிலைபெறுதலும் உரித்தாகும். உம்மையாற் பகரமாகத் திரியாமையும்
உரித்து என்றவாறாம்.
 

இலம்  என்பது  இன்மை  என்னும் பெயர்பொருட்டாய் நின்றது. இலம்
என்னும்  தன்மைப்  பன்மைக் குறிப்புவினைமுற்றுச் சொல்வேறு இதுவேறு
என அறிக.
 

எ.டு :‘‘இலம்படுபுலவர்   மண்டை’’   (புறம் - 155)  ‘‘இலம்படுபுலவர்
ஏற்றகைந் நிறைய’’ (மலைபடு-576) எனவரும்.
 

‘‘வலம்படுவாய்வாள்’’   என்றவிடத்தும்   மகரம்  கெடாது  நின்றதால்
எனின்? ஆண்டஃது பெயர்ச் சொல்லாதலின் பொதுவிதியுள் அடங்கும்.
 

ஈண்டு   ஓதப்பெற்ற   இலம்   என்னும்  சொல்  ‘இலம்பாடு  ஒற்கம்
ஆயிரண்டும்    வறுமை’   (உரி - 62)    எனப்பட்ட    உரிச்சொல்லின்
கடைக்குறையாகும்.    இச்சொல்    புலப்பாடு,   வாய்பாடு,    கடப்பாடு
என்பவற்றைப்  போல,  விகுதியோடு கூடி நின்றல்லது பொருளுணர்த்தற்கு
ஏலாது  எனினும்,  நல்லிசைப்  புலவோர் ‘இலம்பாடு’ என்னும் சொற்குரிய
வறுமை  என்னும்  பொருளில் பாடு  என்னும்  இறுதி நிலையின்றி ‘இலம்’
என்னும்  முதனிலையை  மட்டும்  கொண்டு  செய்யுளின்கண்  ஆளுதலை
நோக்கி,   ஆசிரியர்   அதனை   நிறுத்த  சொல்லாக  வைத்து இவ்விதி
கூறினாராவார்.
 

மற்றும்   இவ்உரிச்சொல்லுக்குப்   படு  என்னும்  தொழிற்  சொல்லே
வருமொழியாக   வருதலைக்   கண்டு   ஏனைய   மகர  ஈற்றுப் பெயர்ச்
சொற்களைப் போலக் கெட்டுநின்று பகரமாகிய