‘‘ஓரியற்று’’ என்றதனான் மகிழ் என்னும் மரப்பெயர்க்கும் இவ்விதி கொள்க. மகிழ்ங்கோடு - மகிழங்கோடு எனவரும். |
சூ. 387 : | பாழ்என் கிளவி மெல்லெழுத் துறழ்வே |
(92) |
க-து : | பாழ் என்னும் சொற்குச் சிறப்புவிதி கூறுகின்றது. |
பொருள்: பாழ் என்னும் பண்புப்பெயர் மெல்லெழுத்தொடு உறழ்ந்து வரும். |
எ. டு: பாழ்க்கிணறு - பாழ்ங்கிணறு, சேரி, தோட்டம், படப்பை எனவரும். பாழ்ங்கிணறு என்பதைப் பாழினுட் கிணறு என ஏழாம் வேற்றுமைப் பொருள்பட விரிப்பார் நச்சினார்க்கினியர். அஃதொவ்வாது பாழினை உற்றகிணறு என இரண்டாவது விரித்தலே சால்பென்க. |
சூ. 388 : | ஏழென் கிளவி உருபியல் நிலையும் |
(93) |
க-து : | ஏழ் என்னும் சொல் அன்சாரியை பெறுமென்கின்றது. |
பொருள்: ஏழ் என்னும் எண்ணுப்பெயர் பொருட்பெயர்களொடு புணருங்கால் உருபுபுணர்ச்சிக்கு ஓதியாங்கு அன்சாரியை பெற்று நிற்கும். |
எ. டு: ஏழன்காயம், சுக்கு, தோரை, பயறு எனவரும். ஏழனாற் கொண்ட (ஏழுகாசுகளாற் கொண்ட) காயம் எனவிரியும். |
சூ. 389 : | அளவும் நிறையும் எண்ணும் வருவழி |
| நெடுமுதல் குறுகலும் உகரம் வருதலும் |
| கடிநிலை யின்றே ஆசிரி யர்க்க |
(94) |
க-து : | ஏழ் என்னும் சொல் பிற அளவைப் பெயர்களொடு புணருமாறு கூறுகின்றது. |
பொருள்: மேற்கூறிய ஏழ் என்னும் சொல்முன் அளவுப் பெயரும் நிறைப் பெயரும் எண்ணுப் பெயரும் வரும்வழி நெட்டெழுத்தாகிய முதல் குறுகலும் ழகரத்தின் மேல் ஓர் உகரம் வருதலும் ஆசிரியர்க்குத் தவிர்க்கும் நிலையின்று. எனவே, முதல் குறுகும்; உகரம் பெறும் என்றவாறு. |
எ. டு: எழுகலம், சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி எனவும் எழுகழஞ்சு, தொடி, பலம் எனவும் எழுமூன்று, எழுநான்கு, எழுநூறு எனவும் வரும். |