அளவு முதலிய பெயர்க்குக் கடிநிலை இன்று என்றதனான் அவை பிறபொருட் பெயராய் வரும்வழி இயல்பாக நின்று புணருமென்க. |
எ. டு: ஏழ்கலம் (கலம் - கப்பல்); ஏழ்மண்டை (மண்டை - பாத்திரம்); ஏழ்தொடி (தொடி-ஓர் அணிகலன்) எனவரும். |
‘‘கடிநிலையின்றே’’ என்றதனான் மேல்விதந்து கூறுவனவல்லாத பிறபொருட்பெயர்கள் வருங்கால் நெடுமுதல் குறுகி உகரம் பெறுதல் ஈண்டே கொள்ளப்படும். |
எ. டு: எழுகடல், எழுசிறை, எழுதிசை, எழுபிறப்பு எனவரும். இவை இயல்பாகப் புணர்தலே சால்புடைத்தாகும் என்க. வல்லெழுத்ததிகாரத்தை மாற்றியமையான் இயல்புகணத்தும் இத்திரிபு ஏற்புழிக் கொள்ளப்படும். எழுநிலம் (செய்-164) எழுவகை (புறத்-20) எனவரும். |
சூ. 390 : | பத்தென் கிளவி ஒற்றிடை கெடுவழி |
| நிற்றல் வேண்டும் ஆய்தப் புள்ளி |
(95) |
க-து : | ஏழ் என்பதன் முன்வரும் பத்து என்னும் சொல் திரியுமாறு கூறுகின்றது. |
பொருள் :ஏழ் என்பதன் முன்வரும் பத்து என்னும் சொல்லின் இடைநின்ற ஒற்றுக்கெடுமிடத்து ஆண்டு ஆய்தப் புள்ளியாகிய எழுத்து நிற்றல் வேண்டும். |
எ. டு: எழுபஃது எனவரும். ஒன்று முதலாய எண்களின் முன்னர்ப் பத்து என்னும் சொல்லின் இடை ஒற்றுக்கெட்டு ஆய்தமாதல் குற்றியலுகரப் புணரியலுள் விதிப்பார் எனினும் ஏழ் என்பது குற்றியலுகர ஈறன்மையான் அவ்விதிகள் இதற்குச் செல்லாமை நோக்கி ஈண்டு விதித்தார் என்க. |
எழுபத்தொன்று, எழுபத்திமூன்று என்றாற்போலப் பத்து என்பது பிற எண்ணொடு தொடர்ந்து வருங்கால் இடையொற்றுக் கெடாது; தனித்து வந்துழியே கெடும் என்பதனை உணர்த்த ‘‘ஒற்றிடைகெடுவழி’’ என்றார். |
சூ. 391 : | ஆயிரம் வருவழி உகரங் கெடுமே |
(96) |
க-து : | ஏழு என்னும் திரிபுற்றசொல் ஆயிரம் வருமிடத்து இயல்பாகுமென்கின்றது. |
பொருள் :ஏழு என விதியீறாய் நின்றசொல்லின்முன் ஆயிரம் என்னும் எண்ணுப் பெயர்வரின் உகரம் கெடும். |