எழு என்பதன்கண் உகரம் கெட்ட வழி ‘ழ’கர ஈறு குறிற்கீழ் ஒற்றாக நிற்றற்கு ஏலாமையான் முதல் நீளும் என்பது உய்த்துணரப்படுமாதலின் எடுத்துக் கூறாராயினர் என அறிக. |
எ. டு:எழு (ஏழ்) + ஆயிரம் - ஏழாயிரம் எனவரும். |
சூ. 392 : | நூறூர்ந்து வரூஉம் ஆயிரக் கிளவிக்குக் |
| கூறிய நெடுமுதல் குறுக்க மின்றே |
(97) |
க-து : | நூறாயிரம் என்னும் சொல் வருமிடத்து ஏழ் என்னும் சொல் இயல்பாக நின்றுபுணருமென்கின்றது. |
பொருள்: ஏழு என்னும் சொல் நூறு என்பதனைத் தொடர்ந்து வரும் ஆயிரம் என்னும் தொகைமொழிக்கு மேற் பொதுவிதியாகக் கூறிய நெடுமுதல் குறுக்கம் இல்லை. உகரக் கேடு மேலைச் சூத்திரத்துக் கூறப்பட்டது. |
எ. டு: எழு + நூறாயிரம் = ஏழ்நூறாயிரம் எனவரும். ‘கூறிய’ என்றதனான் சிறுபான்மை எழுநூறாயிரம் எனவருதலும் கொள்க. |
சூ. 393 : | ஐஅம் பல்என வரூஉம் இறுதி |
| அல்பெயர் எண்ணினும் ஆயியல் நிலையும் |
(98) |
க-து : | ஒருசார் எண்ணுப் பெயர்க்கு மேலை விதியை எய்துவிக்கின்றது. |
பொருள்: (எழு) ஏழ் என்னும் சொல் ஐ, அம், பல் என்னும் இறுதிகளை உடையவாய் வரும் பொருட் பெயரல்லாத எண்ணுப் பெயர்களாகிய தாமரை, வெள்ளம், ஆம்பல், நெய்தல் என்னும் சொற்கள் வருமிடத்தும் மேற்கூறிய இயல்பொடு நிற்கும். |
அஃதாவது நெடுமுதல் குறுகாமலும் உகரம் பெறாமலும் இயல்பாக நிற்கும். |
எ. டு: ஏழ்தாமரை, ஏழ் வெள்ளம், ஏழாம்பல், ஏழ்நெய்தல் எனவரும். |
விகுதிகளைக் கொண்டு பெயர்நிலைக் கிளவிகளைச் சுட்டிக் கூறும் மரபு வடமொழிக்கே உரியதெனக் கருதற்க. அது தமிழுக்கும் உரியதே என்பதை உணர்த்த ‘ஐஅம் பல் என வரூஉம் இறுதி அல்பெயர்’ என்றார். எனவரூஉம் என்றது இவ்வாறு வருவன பிறவும் கொள்க என்றவாறு. |