நூன்மரபு307

பொருள்:   நெட்டெழுத்தின் பின் நிற்கும் ளகர ஈற்றுச் சொற்கள் சில
இயல்பாக   வருவனவும்,  வேற்றுமைப்   புணர்ச்சியல்லாத  அல்வழிக்கண்
வேற்றுமைப்  புணர்ச்சிக்குரிய விதியொடு  நிற்றலும்  உளவாம்; அவற்றைப்
(மரபுணர்ந்து) போற்றிக் கொள்ளுதல் வேண்டும்.
 

எ. டு:  கோள்கடிது;  தாள்கடிது,  சிறிது, பெரிது என இவை இயல்பாக
வந்தன.  நாட்கடிது-புட்பறந்தற்றே, உட்பொருள்  என  வேற்றுமையல்வழித்
திரிந்தன.  புட்டேம்பப் புயன் மாறி  என்பது  தகரம் வருதலினால் எய்திய
திரிபாகலின் அதனைக் காட்டல் நிரம்பாதென்க.
 

இனி    வெட்பாலை,   கோட்பாடு   என்றாற்  போல இருமொழி ஒரு
சொல்லாய்   நிற்பனவற்றையும்,   நாட்படவரும்    என்றாற்     போலப்
புணர்மொழியாக     வருவனவற்றையும்   ஓர்ந்தறிதல்  வேண்டுமென்பார்
‘போற்றல் வேண்டும்’ என்றார்.
 

உதளங்காய்  எனச்    சாரியை    பெறுதலும்    கொள்க   என்பார்
நச்சினார்க்கினியர். சாரியை பெறுதல் “பெயருந்  தொழிலும்  பிரிந்தொருங்
கிசைப்ப’’   (புண-30)    என்னும் சூத்திரத்தான்   எய்துமாகலின்  ஈண்டு
அமைத்தல் வேண்டா என்க.
 

சூ. 401 :

தொழிற்பெய ரெல்லாம் தொழிற்பெய ரியல
(106)
 

க-து :

ளகர ஈற்றுத் தொழிற்பெயர் புணருமாறு கூறுகின்றது.
 

பொருள்:   ளகார  ஈற்றுத்  தொழிற்பெயரெல்லாம் இருவழியும் ஞகார
ஈற்றுத்  தொழிற்பெயரியல்பினவாய்  உகரம்  பெற்று  வல்லெழுத்து வரின்
மிக்கும் ஞநமவரின் இயல்பாயும் புணரும்.
 

எ. டு:  துள்ளுக்கடிது,  வள்ளுக்கடிது,  சிறிது,  தீது, பெரிது எனவரும்.
துள்ளுக்கடுமை,   சிறுமை,  தீமை,  பெருமை  என  வேற்றுமைக்கண்ணும்
ஒட்டிக் கொள்க.
 

உரையாசிரியன்மார்  கோள் கடிது - கோட்கடிது;வாள்கடிது - வாட்கடிது
என   உகரம்  பெறாது   உறழ்ந்து  வருவனவும் கொள்க என்பார். கோள்
என்பது கொள் என்னும்  முதனிலைத்   தொழிற்  பெயர் திரிந்து பெயர்ப்
பொருட்டாய்   நிற்கும்  சொல்லாகலானும்  வாள்   என்பது    பெயருரிச்
சொல்லாக நிற்றலானும் அவர் கருத்துப் பொருந்தாதென்க.
 

வாள்  என்பது  கொல்லுதல்  என்னும் பொருள் தரும் தொழிற் பெயர்
என்பார் ஒருசாரார். சொல்லுதல் என்னும் பொருள் தரும்