தொழிற்பெயர் என்பார் ஒருசாரார். வாள் என்பதனடியாக வினைமுற்றும் இருவகை எச்சமும் பிறவாமையான் உரிச்சொல் எனக்கோடலே சாலுமென்க. |
இனி, வாளாதி - வாளாதே என வினையாக வருதலின் தொழிற்பெயராகக் கொள்ளலாமெனின்? அஃது இன்னா, பொல்லா என்பவை போலப் பண்புரிச் சொல்லடியாகப் பிறந்த எதிர்மறைக் குறிப்புச் சொல்லாவதன்றி முதனிலைத் தொழிற் பெயராகாதென்க. |
இச்சொல் செயலறவைக்குறித்து வாளாவிருந்தான், வாளாகிடந்தான், வாய்வாளாதி, வாய்வாளாதே என எதிர்மறையே குறித்து வருதலன்றி யாண்டும் விதி வினையாக வாராமையறிக. வாள் என்பது ‘சொல்’ என்னும் பொருள்பட நிற்கும் உரிச்சொல் என்றலே நேரிது. |
சூ. 402 : | இருளென் கிளவி வெயிலியல் நிலையும் |
(107) |
க-து : | இருள் என்னும் சொற்குச் சிறப்புவிதி கூறுகின்றது. |
பொருள்: இருள் என்னும் சொல் வெயில் என்னும் சொற்கு ஓதிய இயல்பிற்றாய் அத்தும், இன்னும் ஆகிய சாரியைகள் பெற்றுப் புணரும். |
எ. டு: இருளத்துக் கொண்டான்; இருளிற் கொண்டான், சென்றான, தந்தான், போயினான் எனவரும். ஞான்றான், நீண்டான், மாண்டான், வந்தான் என ஏனைக் கணத்தும் வரும். |
சூ. 403 : | புள்ளும் வள்ளும் தொழிற்பெய ரியல |
(108) |
க-து : | புள், வள் என்னும் பெயர்கள் உகரம் பெறுமென்கின்றது. |
பொருள்: புள், வள் என்னும் சொற்கள் தொழிற் பெயர்க்கு ஓதிய இயல்பினவாய் உகரம் பெற்று வல்லெழுத்துவரின் மிக்கும் ஞநமவரின் இயல்பாயும் புணரும். |
எ. டு: புள்ளுக்கடிது, வள்ளுக்கடிது, சிறிது, தீது, பெரிது எனவரும். ஞான்றது, நீண்டது, மாண்டது எனவும் வரும். வேற்றுமைக்கண்ணும் இவ்வாறே கடுமை, சிறுமை, தீமை, வலிமை என்பவற்றைக் கூட்டிக் கண்டு கொள்க. |
பள்ளுக்கடிது-கடுமை எனச்சிறுபான்மை ஏனையவும் உகரம் பெறுதலைப் புறனடையாற் கொள்க. |