குற்றியலுகரம் வல்லெழுத்துக்களை ஊர்ந்து, ஏனை எழுத்துக்களைச் சார்ந்து, நிறுத்த சொல்லின் ஈறாய்க் குறித்து வருகிளவியொடு இருவழியானும் புணருங்கால், ஏனைய உயிரீறு புள்ளியீறுகளைப் போலத் தனித்து வரல் மரபிற்றாய் மயங்காமல் சார்ந்து நின்று நாற்கணங்களொடும் புணர்தலானும், உயிர் வருங்கால் தான் கெடாமல் அதனை ஏற்று உயிர்மெய்யெழுத்தைப் போல ஒன்றி நின்று மாத்திரை மட்டுமே குன்றிப் புணர்தலானும், ஏனைக்கணங்கள் வரின் முற்றியலுகரத்தொடு ஒப்ப நேர்பும் நிரைபுமாக அசைக்குறுப்பாய் நிற்றலானும், புணருமிடத்து எய்தும் திரிபுகள் தனக்கு முன்னும் பின்னும் நிற்கும் எழுத்துக்கள் பெறத் தான் திரிபுறுத லின்மையானும் குற்றியலுகர மயங்கியல் என்னாது புணரியல் என்றார். புணர்ச்சி என்பது தத்தம்தன்மை திரியாமல் செப்பின் புணர்ச்சிபோல் நிற்பது. மயக்கம் என்பது மணியுள் கோத்த நூலைப் போலத் திரிபுற்று நிற்பது. |
குற்றியலுகரம் எனப் பொதுப்பட நிற்பினும் மொழிமுதற் குற்றியலுகரம் ஒன்றேயாகலானும் அது புணரியல் விதிப்படி முதலொலியாகாமையானும் ஈண்டுக் கூறுவது மொழியிறுதிக் குற்றியலுகரம் என்பது பெறப்படும். |
‘‘நெட்டெழுத் திம்பரும் தொடர்மொழி யீற்றும் வல்லா றூர்ந்து வரும்’’ எனப்பட்ட குற்றியலுகரம் சார்பெழுத்து என்பதும், அஃது அரைமாத்திரை யளவினதாய்ப் புணர்ந்து நிற்கும் என்பதும், தான் சார்ந்து நிற்கும் எழுத்துக்களின் பிறப்பிலக்கணங்களையே தானும் பெறும் என்பதும் நூன்மரபு முதலிய நான்கியலினுள் கூறப்பெற்ற இலக்கணங்களாற் பெறப்பட்டன. |
அஃது உருபொடு புணருமாறு உருபியலுள்ளும் பொதுவாய சிலவிதிகளைத் தொகைமரபினுள்ளும் கூறினமையின், இவ்வியலுள், ‘‘தொடர்மொழி யீற்றும்’’ என்றதனை ஐந்தாக விரித்து அவற்றிற்குப் பெயரும் முறையும் கூறி, அவை இருவழியானும் பொருட்பெயரொடும் அளவைப் பெயர்களொடும் புணருமாறு கூறுகின்றார். |
சூ. 406: | ஈரெழுத் தொருமொழி உயிர்தொடர் இடைத்தொடர் |
| ஆய்தத் தொடர்மொழி வன்றொடர் மென்றொடர் |
| ஆயிரு மூன்றே உகரங் குறுகிடன் |
(1) |
க-து : | மொழிமரபினுள் நெட்டெழுத்திம்பரும் தொடர்மொழியீற்றும் வரும் எனப்பெற்ற குற்றியலுகரம் தான் ஊர்ந்து நிற்கும் எழுத்திற்கு மேலாகத் தொடர்ந்து சார்ந்து நிற்கும் எழுத்துக்கள் காரணமாக அறுவகைப்படுதலின் அவற்றின் பெயரும் முறையும் கூறுகின்றார். |