xxxvii |
நன்றியுரை |
ஊர் சொல்வேன் பேர்சொல்வேன் உத்தமனே நின்திருத்தாள் |
சீர்சொல்வேன் என்றனைநீ சேர்க்காது அகற்றுவையேல் |
நேர்சொல்வாய் உன்றனக்கு நீதியீ தல்லவென்றே |
யார்சொல்வார் ஐயா எழுத்தறியும் பெருமானே![வள்ளலார்] |
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழைமையதாய்ப் பின்னைப்புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியதாய்த் திகழும் செந்தமிழ்ப் பனுவலாகிய தொல்காப்பியம் தமிழ்மொழிக்கும் தமிழர்பண்பாட்டிற்கும் ஓர் அரணாகவும் தமிழர்க்குப்பேறாகவும் விளங்குதலான் அதனை அறிவுவேட்கையுடையார் யாவரும் பயின்றுணர்தல் வேண்டுமென்னும் நல்லெண்ணத்தான் இளம்பூரணர் முதலாய அறிஞர் பெருமக்கள் அதன் பொருளை ஒல்லும் வகையான் உரைத்துச் சென்றனர். அவ்வடிப்படையில் இடைக்கால, இக்காலப் பேரறிஞர் பலரின் ஆய்வுரைகளும் அகல உரைகளும் தோன்றுவன வாயின. அவை யாவும் அரிதும் பெரிதுமாக உள்ளமையின் சிறிது கற்றாரும் அதன் பருப்பொருளை அறிந்துகொள்ளத்தக்கதொரு காண்டிகையுரை அமையின் நலம் பயக்கும் என ஊழ்வயத்தாற் கருதியயான் முன்னையோர் உரைகளையும் பின்னையோர் விளக்கங்களையும் பல்கால் ஊன்றிப் பயின்று வருங்கால் அவர்தம் கருத்துக்களுள் பல நூலொடு பொருந்தாதவையாக எனக்குத்தோன்றின. பாடங்களுள் சிலபிழையாக உள்ளமையும் புலனாயிற்று. அவற்றை விளக்கு முகத்தான் இடையிடையே ஆய்வுரைகளையும் கூட்டி இக்காண்டிகையுரையை வரைய முற்பட்டேன். |
நாற்பதாண்டுக்காலமாக யான் சிந்தித்துத் தேர்ந்த கருத்துக்களுள் மறவி என்னும் கள்வன் கவர்ந்தவை போக எஞ்சியவற்றை ஐந்தாண்டுகளாக எழுதி ஒருவாறு நிறைவு செய்தேன். உரை எழுதத் தொடங்கியது முதல் பதிப்பிக்கத்தொடங்கியது வரை நேர்ந்த - சூழ்ந்த நிகழ்வுகளைப் பின்னர்த் தனிவரலாறாக எழுத எண்ணியுள்ளேனாதலின், ஈண்டு இப்பதிப்பிற்குரிய நன்றியுரையை மட்டும் வரைகின்றேன். |
ஆசிபெற்று இவ்வுரையை எழுதத்தொடங்கியது முதல், காணும் போதெல்லாம் அளவளாவி உரை இனிது நிறைவேற வாழ்த்தியும் சோர்வு நீங்க ஊக்கியும் இப்பதிப்பிற்கு ஆர்வத்தோடு வாழ்த்துரை வழங்கியும் என்பால் அருள் புரிந்து வரும் நடையாடும் தெய்வமாம் தவத்திரு காத்தையா சுவாமிகளுக்கும், விரைவாக எழுதி |