vi |
வாழ்த்துரை |
யு. சுப்ரமணியன்இ.ஆ.ப. (ஓ) |
இராசப்பா நகர் - தஞ்சாவூர் - 613007 |
தமிழ் மொழிக்குப் பெருமை தருவதும் மொழியியல் அறிஞர்களால் பாராட்டப்பெறுவதுமான தொல்காப்பியம் ஒப்பில்லாத சிறப்புடைய இலக்கணநூல் என்பது காலந்தொறும் அதுபற்றித் தோன்றி வந்துள்ள உரைகளாலும் இக்கால அறிஞர் பலரின் ஆராய்ச்சி விளக்கங்களாலும் தெரியவரும். அவ் உரை விளக்கங்கள் பல இடங்களில் ஒன்றற்கு ஒன்று வேறுபடுவதனால் சரியாக விளங்கிக்கொள்வது அரிதென அறிஞர்கள் கூறுகின்றனர். அதன் பொருளை ஓரளவு எல்லோரும் தெரிந்து கொள்ளத்தக்கதோர் உரை இல்லாதது ஒருகுறை என்பது என்போன்றவர்கள் கருத்தாகும். |
இந்நிலையில் நமது அன்பிற்குரிய பாவலரேறு ச. பாலசுந்தரம் அவர்கள் தொல்காப்பியத்தின் மூன்று அதிகாரங்களுக்கும் ஆராய்ச்சிக் காண்டிகை உரை எழுதியுள்ளார்கள். இப்பொழுது எழுத்ததிகார உரை வெளிவருகிறது. நான் தஞ்சைக்கு வந்தபின் தமிழுக்கு நிலையான தொண்டு யாதேனும் செய்யவேண்டுமென்னும் விருப்பத்தால் சால்பகத்தை நிறுவத் தொடங்கிய பொழுது பாவலருடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. தஞ்சைத் தமிழ்ச் சங்கப்பணிகளால் நெருக்கம் ஏற்பட்டது. அவ்வப்பொழுது இலக்கண இலக்கியங்கள் பற்றிய கருத்துக்களை அளவளாவி மகிழ்வேன். ஒருசமயம் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த கருத்தரங்கில் தொல்காப்பியம் பற்றியும் அதில் உள்ள சூத்திரங்களின் சில நுட்பமான கருத்துக்கள் பற்றியும் பேசினார். பேரறிஞர் பலரிடம் அப்புதிய கருத்துக்களுக்கு வரவேற்பிருந்தமையைப் பார்த்தேன். |
தலைசிறந்த தமிழறிஞரும் வடமொழிப் பேராசிரியருமான திரு. மு. அருணாசலம் அவர்கள் இவருடைய புதிய கருத்துக்களைப் பாராட்டிக் கூறினார்கள். அதனால் இவர் உரை வெளிவரின் அது தமிழுக்குப் பயனுடையதாக இருக்கும் என எண்ணி எவ்வளவு விரைவாக எழுத முடியுமோ எழுதி அச்சிடக் கொடுங்கள். மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று விரைவுபடுத்தி வந்தேன். அம்முறையில் இந்த எழுத்ததிகாரம் வெளிவருவதைப் பார்த்து மகிழ்ந்தேன். இதன் முன்னுரையையும் எழுத்திலக்கணக் கோட்பாடுகள் என்ற பகுதியையும் படித்த |