viii |
ஒரு விளக்கமும் தமிழ்ப் புலமைக்கு ஒரு விளக்கமும் காட்டித் தம்புகழ் நிறுவியுள்ள தகைமையைத் தமிழகம் என்றும் போற்றக் கடவது. |
தொல்காப்பியத்திற்கு எழுந்த உரைகள் யாவும் இற்றைக்கு ஐந்நூறு ஆண்டுகட்கு முற்பட்டவை. ஆசிரியர் சிவஞான முனிவர், அரசன் சண்முகனார் போன்றோர் ஓரோர்பாவுக்கு விருத்தியுரை செய்து சென்றுவிட்டனர். இந்நிலையில் தொல்காப்பியத்திற்கு மேலும் தெளிவான ஓர் உரை தோன்றுவது வரலாற்றின் கட்டாயமாகியுள்ளது. |
இத்தகு உரை எழுதும் திறம் எல்லோர்க்கும் வாய்ப்பதன்று. நூல்களையும் முன்னோர் உரைகளையும் பல்கால் நுணுகிக்கற்றுத் தெளிந்து அப்பால் தாமே உரைவரையும் புலமை சான்றவர்க்கே அது கைகூடும். இவ்வாறு மூன்று அதிகாரங்கட்கும் பொருள் வரைந்த இப்பேராசிரியர் ஒரு வாழ்த்துரை வேண்ட அதன் பயனாக எழுதப் பெறுவது இந்நூன் முகவுரை. |
எழுத்ததிகாரத்திற்கு முதலில் இளம்பூரணரும் பின்னர் நச்சினார்க்கினியரும் உரைசெய்துள்ளனர். அவையும் காண்டிகை உரைகளே. இவரும் ஒரு காண்டிகையுரையையே மேலும் தெளிவாகவும், விரிவாகவும், ஆய்வுரையோடு வரைந்துள்ளார். முன்னையோர் உரைகள் சிறுகாண்டிகை எனின் இதுபெருங்காண்டிகையுரை எனல் தகும். |
இதற்கு யான் எழுதும் இவ் அணிந்துரை இவ்வுரை பற்றிய ஆராய்ச்சியன்று. அது ஒரு தனிநூலாக விரியும். இவ்வுரையை ஒருமுறை முழுமையாக நோக்கிய அளவில் இதன்கண் காணப்படும் சில உரை இயல்புகளையும் நீர்மைகளையும் பொதுவாகச் சுட்டிக் காட்டுவதே எனது நோக்கமாம். |
தொல்காப்பியம் முழுமைக்கும் இன்று கிடைப்பது 1000 ஆண்டுகட்கு முன் தோன்றிய இளம்பூரணது உரையே. அதன்பின் நூல் முழுமைக்கும் நாம் பெறுவது ஆசிரியர் பாலசுந்தரனார் எழுதியுள்ள இப்புத்துரையேயாகும். இடையில் தோன்றிய பல சான்றோர் உரைகள் ஒவ்வோர் அதிகாரத்திற்கே உள. முழுமைக்கும் உரை எழுதியதாகக் கருதத்தகும் ஆசிரியர் நச்சினார்க்கினியர் உரையுள் பொருளதிகாரத்தின் இறுதிப் பகுதிகள் கிடைக்கவில்லை. எனவே நூல் முழுமைக்கும் உரை வேண்டிய வேட்கையை நிறைவு செய்யும் முறையில் 1000 |