நிறுத்த முறையானே வினைச்சொல்லாமா றுணர்த்திய வெடுத்துக் கொண்டார். அதனா னிவ்வோத்து வினையிய லென்னும் பெயர்த்தாயிற்று. வினையென்று சொல்லப்படுவது வேற்றுமையொடு பொருந்தாது ஆராயுங்காற் காலத்தொடு புலப்படும் ; எ-று. ஈண்டு வேற்றுமை என்றது உருபை. எ - டு:உண்டான், கரியன் என வேற்றுமை கொள்ளாது காலமொடு தோன்றியவாறு கண்டுகொள்க. வேற்றுமை கொள்ளாதென்னாது காலமொடு தோன்றுமெனின் தொழினிலையொட்டுந் தொழிற்பெயரும் வினைச்சொல்லாவான் செல்லுமாகலானும், காலமொடு தோன்றுமென்னாது வேற்றுமை கொள்ளாதெனின் இடைச்சொல்லும் உரிச்சொல்லும் வினைச்சொல்லெனப்படுமாகலானும், அவ்விருதிறமு நீக்குதற்கு `வேற்றுமை கொள்ளாது காலமொடு தோன்றும்' என்றார். வினைச்சொல்லுள் வெளிப்படக் காலம் விளக்காதனவுமுள; அவையும் ஆராயுங்காற் காலமுடைய வென்றற்கு, `நினையுங்காலை' என்றார். அவை யிவையென்பது முன்னர்ச் சூத்திரத்தாற் பெறப்படும். உணர்த்தப்படும் வினைச்சொற்கெல்லாம் பொதுவிலக்கண முணர்த்தியவாறு. (1)
|