2.வேற்றுமையியல்

ஆறாம் வேற்றுமை

அப் பொருளின் பாகுபாடுகள்

80இயற்கையின் உடைமையின் முறைமையின் கிழமையின்
செயற்கையின் முதுமையின் வினையி னென்றா
கருவியின் துணையின் கலத்தின் முதலின்
ஒருவழி யுறுப்பின் குழுவி னென்றா
தெரிந்துமொழிச் செய்தியின் நிலையின் வாழ்ச்சியின்
திரிந்துவேறு படூஉம் பிறவும் அன்ன
கூறிய மருங்கில் தோன்றுங் கிளவி
ஆறன் பால என்மனார் புலவர்1.

இயற்கை முதலாக வாழ்ச்சி யீறாகச் சொல்லப்பட்டனவும் திரிந்து வேறுபடூஉ மன்ன பிறவுமாகிய மேற்கூறப்பட்ட கிழமைப் பொருட்கண் தோன்றுஞ் சொல்லெல்லாம் ஆறாம் வேற்றுமைத் திறத்தனவென்று சொல்லுவர் புலவர் ; எ-று .

திரிந்து வேறுபடூஉ மன்ன பிறவுமென்றாரேனும் திரிந்து வேறுபடுதல் அன்ன பிறவுமென்றதனால் தழுவப்படுவன வற்றுள் ஒரு சாரனவற்றிற்கே கொள்க.

எ - டு: எள்ளது குப்பை, படையது குழாம் என்பன குழூஉக் கிழமை. அவை முறையானே ஒன்று பல குழீஇயதும் வேறு பல குழீஇயதுமாம். சாத்தனதியற்கை நிலத்ததகலம் என்பன இயற்கைக்கிழமை. சாத்தனது நிலைமை, சாத்தன தில்லாமை2 என்பன நிலைக்கிழமை. இவையொன்றியற்கிழமை3 யானையதுகோடு, புலியதுகிர் என்பன உறுப்பின் கிழமை. உறுப்பாவது பொருளின் ஏகதேசமென்ப தறிவித்தற்கு ஒருவழி யுறுப்பென்றார். சாத்தனது செயற்கை, சாத்தனது கற்றறிவு என்பன செயற்கைக்கிழமை. அரசனது முதுமை, அரசனது முதிர்வு என்பன முதுமைக்கிழமை. முதுமை யென்பது பிறிதோர் காரணம் பற்றாது காலம் பற்றி ஒருதலையாக அப் பொருட்கட்டோன்றும் பருவமாகலின் செயற்கையு ளடக்காது வேறு கூறினார். சாத்தனது தொழில், சாத்தனது செலவு என்பன வினைக்கிழமை. இவை மெய்திரிந்தாய தற்கிழமை. சாத்தனது உடைமை, சாத்தனது தோட்டம் என்பன உடைமைக்கிழமை மறியதுதாய். மறியது தந்தை என்பன முறைமைக்கிழமை. இசையது கருவி, வனை கலத்தது திகிரி என்பன கருவிக்கிழமை. அவனது துணை, அவனதிணங்கு என்பன துணைக்கிழமை. நிலத்ததொற்றிக்கலம்4 சாத்தனது விலைத்தீட்டு என்பன கலக்கிழமை. ஒற்றியது முதல், ஒற்றியது பொருள் என்பன முதற்கிழமை. கபிலரது பாட்டு, பரணரது பாட்டியல் என்பன செய்யுட்கிழமை. தெரிந்து மொழியாற் செய்யப்படுதலின் தெரிந்து மொழிச் செய்தியாயின. இவை பொருட்பிறிதின்கிழமை. முருகனது குறிஞ்சிநிலம், வெள்ளியதாட்சி என்பன கிழமைக்கிழமை. காட்டதியானை, யானையது காடு என்பன வாழ்ச்சிக்கிழமை. அவற்றுள் முருகனது குறிஞ்சிநிலம், யானையது காடு என்பன நிலப்பிறிதின்கிழமை. காட்டதியானை என்பது பொருட்பிறிதின்கிழமை , ஏனையது காலப் பிறிதின்கிழமை.

திரிந்து வேறுபடூஉ மன்ன பிறவு மென்றதனால் எட்சாந்து கோட்டு நூறு சாத்தனதொப்பு தொகையதுவிரி, பொருளது கேடு, சொல்லது பொருள் என்னுந் தொடக்கத்தன கொள்க . அவற்றுள் எட்சாந்து கோட்டு நூறு என்பன முதலாயின முழுவதூஉந் திரிதலின், வேறு கூறினார்.

மேற்சொல்லப்பட்ட தற்கிழமை பிறிதின்கிழமை யென்பனவற்றை விரித்தவாறு.

(19)

1. இந் நூற்பாவிற் கூறப்பட்டுள்ள கிழமைகளுள், இயற்கை , செயற்கை , முதுமை வினை உறுப்பு குழு நிலை திரிந்து வேறுபடுவது என்பன தற்கிழமை ; உடைமை முறைமை, கிழமை , கருவி , துணை, வாழ்ச்சி என்பன பிறிதின்கிழமை ; தெரிந்துமொழிச்செய்தி என்பது, பொதுக்கிழமை

2. சாத்தனது இல்லறம் ; [தெய்வச்சிலையார்]

3. ஒன்றியற்கிழமை - பண்புத்தற்கிழமை. இது குணப்பண்பு. தொழிற்பண்பு என இருவகைப்படும்.

4. கலம் - ஓலைப்பத்திரம்.