4. விளிமரபு. விளியின் இலக்கணம் 115. | விளியெனப் படுப கொள்ளும் பெயரொடு தெளியத் தோன்று மியற்கைய வென்ப. |
இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், விளிமரபு என்னும் பெயர்த்து. நிறுத்த முறையானே எழுவகை வேற்றுமையும், அவற்றது மயக்கமும் உணர்த்தி யதன்பின், எட்டாவதாகிய விளி இலக்கணம் உணர்த்தினமையாற் பெற்ற பெயர். இதன் முதற் சூத்திரம் என்னுதலிற்றோ எனின், விளி இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். விளி என்று சொல்லப் படுவன தம்மை ஏற்கும் பெயரோடு விளங்கத் தோன்றும் இயற்கையினை யுடைய என்று சொல்லுவார், எ - று. ஏனை வேற்றுமை போல உருபு பிரிந்து வாராது பெரும்பான்மையும் பெயரோடு ஒற்றுமைப்பட்டு வருமென்பதூஉம், ‘கொள்ளும் பெயரோடு’ என்றமையாற் கொள்ளாப் பெயரும் உளவென்பதூஉம் பெறுதும். விளி என்றதனான் இவ்வேற்றுமை விளித்தற் பொருண்மைக்கண் வரும் என்று கொள்க. (1) அதனை இவ்வியலில் உணர்த்துவாம் எனல் 116. | அவ்வே, இவ்வென அறிதற்கு மெய்பெறக் கிளப்ப. |
எய்தியதன்மேற் சிறப்புவிதி வகுத்தலை நுதலிற்று. இ - ள். மேற்சொல்லப்பட்ட விளி வேற்றுமைதாம் இவையென அறிதற்கு உருபு பெறவும் கிளப்ப ஆசிரியர், எ - று. உம்மை எஞ்சி நின்றது. இவ்விரண்டு சூத்திரத்தானும் சொல்லியது விளி வேற்றுமை வருவழி, அதனை ஏற்கும் பெயர் இயல்பாகியும் திரிந்தும் குறைந்தும் மிக்கும் வரும் என்றவாறு. (2) உயர்திணையில் விளியேற்கும் ஈறுகள் 117. | 1அவற்றுள், இ உ ஐ ஓ வென்னும் இறுதி யப்பால் நான்கே உயர்திணை மருங்கின் மெய்ப்பொருள் சுட்டிய விளிகொள் பெயரே. |
1. ‘அவைதாம்’ என்ற தனிச் சொல்லுடன் ஏனையுரைகளில் உள்ளது.
|