உயர்திணைப் பெயருள் உயிரீறாகி விளியேற்கும் பெயரை வகுத்து உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். உயர்திணை இடத்துள்ள பொருளைச் சுட்டிய விளியேற்கும் பெயர் இ, உ, ஐ, ஓ என்னும் ஈற்றினை யுடைய அக் கூற்று நான்கு, எ - று. உயர்திணை மருங்கினுள்ள பொருள் சுட்டிய என்றமையான் உயர்திணைப் பெயரென வகுத்தோதப் படுவனவும், விரவுப் பெயருள் உயர்திணை குறித்தனவும் கொள்ளப்படும். (3) இகர ஐகார ஈறுகள் விளியேற்குமாறு 118. | அவற்றுள், இ ஈ யாகும் ஐ ஆ யாகும். |
இகர ஐகார ஈற்றுப் பெயர் விளி ஏற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். இகரம் ஈகாரமாய்த் திரிந்தும், ஐகாரம் ஆய் எனத் திரிந்தும் விளி ஏற்கும், எ - று. எ - டு. நம்பி, சாத்தி என்பன நம்பீ, சாத்தீ என விளி யேற்கும். நங்கை நங்காய் எனவும், தந்தை தந்தாய் எனவும் வரும். (4) ஓகாரமும் உகரமும் விளியேற்குமாறு 119. | 1ஓவும் உவ்வும் ஏயொடு சிவணும் உகரந் தானே குற்றிய லுகரம். |
உகர ஓகார ஈற்றுப் பெயர் விளி யேற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். ஓகாரமும், உகரமும் ஏகாரம் பெற்று விளி யேற்கும்; ஆண்டுக் குற்றிய லுகரமே ஈறாகுவது, எ - று. எ - டு. கோ, கோவே; வேந்து, வேந்தே என வரும், பிறவு மன்ன. (5) ஏனை உயிர் உயர்திணையில் விளியேலாமை 120. | ஏனை உயிரே உயர்திணை மருங்கில் தாம்விளி கொள்ளா என்மனார் புலவர். |
ஐயந்தீர்த்தல் நுதலிற்று. இ - ள். மேற் சொல்லப்பட்ட உயிரல்லாத உயிர்கள் உயர்திணையிடத்து வரின் விளி ஏலா, எ - று.
1. இதனை இரண்டு சூத்திரங்களாகக் கொள்வர் ஏனை யுரையாளர்.
|