எ - டு. அவையாவன:--ஆடூஉ, மகடூஉ, நீ என்பன. (6) இகர ஈற்று அளபெடைப் பெயர் விளியேற்குமாறு 121. | அளபெடை மிகூஉம் இகர இறுபெயர் இயற்கைய வாகுஞ் செயற்கைய வென்ப. |
இகர ஈற்றுக்கண் வருவதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். அளபெடை மிக்க இகர ஈற்றுப் பெயர் இயற்கையவாகிய செய்தியை யுடைய, எ - று. எ - டு. தோழீஇ என்பது விளிக்கண்ணும் அவ்வாறே வரும். செயற்கை என்றதனான் விளிக்கண் வரும் ஓசை வேறுபாடு அறிந்து கொள்க. (7) முறைப் பெயரில் ‘ஐ’ ஈறு விளியேற்குமாறு 122. | முறைப்பெயர் மருங்கின் ஐயெ னிறுதி ஆவொடு வருதற் குரியவும் உளவே. |
ஐகார வீற்று முறைப் பெயர்க்கண் வரும் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். முறைப் பெயர்க்கண் வரும் ஐகார ஈறு, ஆய் ஆகி வருதலன்றி, ஆ வோடு வருவதற்கு உரிய பெயரும் உள, எ - று. எ - டு. அன்னை என்பது அன்னாய் என வருதலேயன்றி, அன்னா எனவும் வரும். உம்மை இறந்தது தழீஇயிற்று. (8) அண்மை விளி இயல்பாதல் 123. | அண்மைச் சொல்லே யியற்கை யாகும். |
இருதிணைக்கண்ணும் வரும் எல்லாவீற்றுப் பெயரும் அண்மைக் கண் விளி ஏற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. இச்சூத்திரம் முன்னும் பின்னும் நோக்கி நிற்றலிற் சிங்க நோக்காகிக் கிடந்ததென்று கொள்க. இ - ள். மேற் சொல்லப்பட்ட உயிரீற்றுப் பெயரும், இனி யோதுகின்ற புள்ளியீற்றுப் பெயரும் அஃறிணைப் பெயரும் அண்மைக்கண் இயல்பாகி விளியேற்கும். னகர ஈறு சிறப்பு விதி பெறுதலின், அஃதொழிந்த ஏனைய கொள்ளப்படும், எ - று. எ - டு. நம்பிவாழி; நங்கைவாழி; வேந்துவாழி; கோவாழி; மாதர் கூறு; அண்ணல் கூறு; கடவுள்வாழி; தும்பி கூறு; அன்னங் கூறு; கானல் கூறு எனவரும். பிறவும் அன்ன. ஆவுமானியற் பார்ப்பனமாக்களும் என்பதும் அண்மை விளி. பிறவும் அன்ன. (9)
|