86தொல்காப்பியம்[விளிமரபு]

86

அஃறிணைக்கு உரிய பெயர் விளி ஏற்குமாறு உணர்த்துதல்
நுதலிற்று.

இ - ள். புள்ளியும் உயிருமாகிய எழுத்தினை ஈறாக வுடைய அஃறிணைப் பெயராகி வருவனவெல்லாம் விளிஏற்கும் காலந் தோன்றின், ஏகாரம் வருதல் தெளிநிலை யுடைய, எ - று.

எனவே, பிறவாற்றான் வருவன இத்துணை விளக்கம் இல என்றவாறாம். என்பது என் சொன்னவாறோ எனின், அஃறிணைப் பெயர் ஏகாரம் பெற்று விளி ஏற்றல் பெரும்பான்மை: உயர்திணைக்கு ஓதிய வாய்பாட்டால் வருதல் சிறுபான்மை என்றவாறு. காலந் தோன்றின் என்றது அஃறிணைப் பெயர் உயர்திணை போல விளி ஏற்பன சில என்பதூஉம், ஏலாதனவும் ஒருகாலம் பற்றி விளிக்கப்படும் என்பதூஉம் அறிவித்தற்கு எனக் கொள்க.

எ - டு. புலியே, வண்டே, மரையே, மானே, மாவே, குயிலே, மரமே எனவரும். தும்பி, தும்பீ எனவும்; யானை, யானாய் எனவும்; வேங்கை, வேங்காய் எனவும்; தென்றல், தென்றால் எனவும்; அரிமான், அரிமானே எனவும் உயர்திணை வகையான் வருவன சிறுபான்மை. 

(33)

விளி ஏற்கும் பெயர்கள் சேய்மையில் அளபிறந்தொலித்தல்

148.

உளவெனப் பட்ட எல்லாப் பெயரும்
1அளவிறந் தனவே விளிக்குங் காலைச்
சேய்மையின் இசைக்கும் வழக்கத் தான.

இருதிணைக்கண்ணும் வரும் விளிவேற்றுமைக் கெல்லாம் உரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். இருதிணைக்கண்ணும் விளி ஏற்றற்கு உள எனப்பட்ட எல்லாப் பெயரும் ஓதிய அளவினானன்றி மாத்திரை நீண்டு ஒலிக்கும்: சேய்மைக்கண் நின்ற பொருளை விளிக்கும் வழக்கின்கண், எ - று.

எனவே, மேற் சொல்லப்பட்டவற்றுள் நெட்டெழுத்துப் பெற்றன விளிநிலைப் பொருட்கண் என்று கொள்ளப்படும். அளவிறந்தன என்றமையான் மூன்று மாத்திரையின் நீண்டு ஒலித்தலும் கொள்க. 

(34)

எ - டு. சாத்தா அ, கொற்றா அ எனவும்; சாத்தா அஅ, கொற்றா அஅ எனவும் வரும்.

அம்ம என்னும் சொல் விளிப் பொருண்மையில் வரும் எனல்

149.

அம்ம வென்னும் அசைச்சொன் னீட்டம்
அம்முறைப் பெயரொடு சிவணா தாயினும்
விளியொடு கொள்ப தெளியு மோரே.


1. அளபிறந்தனவே என்பது பிற வுரையாசிரியர்கள் கொண்ட பாடம்.