செய்கு என்னும் சொல் வினையொடு முடியும் எனல் 198. | அவற்றுள் செய்கென் கிளவி வினையொடு முடியினும் அவ்வியல் திரியா தென்மனார் புலவர். |
மேற் சொல்லப்பட்டவற்றுள் செய்கு என்பதற்கு ஓர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். மேற் சொல்லப்பட்டவற்றுள் செய்கு என்னும் சொல் வினையோடு முடிந்துழியும், பாலுணர்த்தும் இயற்கையில் திரியாது, எ - று. எ - டு. காண்கு வந்தேன் எனவரும். காண்கு யான் எனப் பெயரோடும் முடிதல் இலக்கணம் என்று கொள்க. அஃதேல், முற்றுச் சொல் பெயர் கொண்டு முடிதல் யாண்டுப் பெற்றாம் எனின், முன் முற்றுச் சொல்லிலக்கணம் கூறுகின்றுழி, அவைதாம், “தத்தம் கிளவி யடுக்குந வரினும்-எத்திறத் தானும் பெயர்முடி பினவே” (சூ. 244) என்னுஞ் சூத்திரத்தாற் பெறுதும். ஈண்டு முடியினும் என்றதற்குப் பொருள் தொடர்புபடினும் என்றவாறாகக் கொள்க. (7) உயர்திணைப் படர்க்கை ஒருமை வினைமுற்று 199. | அன் ஆன் அள் ஆள் என்னும் நான்கும் ஒருவர் மருங்கிற் படர்க்கைச் சொல்லே. |
உயர்திணைப் படர்க்கை வினையுள் ஒருமை வினை உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். அன் முதலாக ஓதப்பட்ட நான்கும் உயர்திணை ஒருமை உணரவரும் படர்க்கைச் சொல்லாம், எ - று. எ - டு. உண்டனன், உண்கின்றனன், உண்பன்; உண்டான், உண்ணாநின்றான், உண்பான்; உண்ணான் இவை ஆண்பால் உணர வந்தன, உண்டனள், உண்கின்றனள், உண்பள்; உண்டாள், உண்கின்றாள், உண்பாள்; உண்ணாள் இவை பெண்பால் உணரவந்தன. பிறவும் அன்ன (8) உயர்திணைப் படர்க்கைப் பன்மை வினைமுற்று 200. | அர் ஆர் ப என வரூஉம் மூன்றும் பல்லோர் மருங்கிற் படர்க்கைச் சொல்லே. |
உயர்திணைப் படர்க்கைப் பன்மை வினை உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். அர், ஆர், ப என வரும் மூன்று சொல்லும் உயர்திணைப் படர்க்கைப் பன்மைவினை உணர வரும் சொல்லாம், எ - று.
|