இது முன்னிலை வினைச்சொற்கு உரியதோர் திரிபு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். ஆய் என்னும் முன்னிலை வினைச்சொல்லும் ஓகாரமாகத் திரியும், எ - று. முன்னிலை வினை ஈண்டுக் கூறிற்றிலராயினும், திரிபு ஒப்புமை நோக்கிப், பருந்துவிழுக்காடு என்னும் சூத்திரக் கிடக்கையான், ஈண்டு ஓதப்பட்டது. எ - டு 1வந்தோய் மன்ற தண்கடற் சேர்ப்ப எனவரும். (15) உயர்திணைக் குறிப்பு வினைமுற்று 207. | 2அதுச்சொல் வேற்றுமை உடைமை யானும் கண்என் வேற்றுமை நிலத்தி னானும் ஒப்பி னானும் பண்பி னானுமென் றப்பாற் காலங் குறிப்பொடு தோன்றும். |
உயர்திணை வினைக்குறிப்பு ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். ஆறாம் வேற்றுமைக்கண் ஓதிய உடைமை என்னும் பொருண்மையானும், ஏழாம் வேற்றுமைக்கண் ஓதிய நிலப் பொருண்மையானும், ஒன்றோடொன்று உவமையாகி வரும் பொருண்மையானும், ஒன்றன் குணமாகிய பண்பினானும் மேற்பகுக்கப்பட்ட காலம் குறிப்பொடு தோன்றும், எ - று. என்று என்பது எண்ணுக் குறித்து நின்றது. இதனாற் சொல்லியது இப்பொருண்மை காரணமாக வினைக்குறிப்புத் தோன்றும் என்றவாறு. உடைமையாவது உடையானும், உடைப்பொருளும் தோன்றவரும். சாத்தனதுடைமை குழை என்பது. இதனுள் உடைப்பொருளை முந்துறக் கிளக்குங்கால், குழையை உடையன் சாத்தன் என வரும். ஆண்டு உடையன் என்பது பெயருமின்றி வினையுமின்றி நின்றதாயினும், உருபேலாது வினைச்சொற்போல நிற்றலின் வினைக்குறிப்பெனக் குறிபெற்றது. நிலத்தினான் வந்தது:--சாத்தன் மாடத்துக்கண்ணிருந்தான் என்னுழி பொருட்கண் சாத்தன் மாடத்தன் என வருவது. மாடத்தன் என்றவழி இடமும், உருபும், வினையும் ஒற்றுமைப்பட்டுச் சாத்தன் என்பதற்கும் பயனிலையாகி வினைச்சொல் நீர்மைப்பட்டு வருதலின், அதுவும் வினைக் குறிப்பாயிற்று. ஒப்பு என்பது--இதனை ஒக்கும் இது என்புழி, ஒத்தல் பெயருமன்றி வினையுமன்றி நின்றதாயினும், தந்தையை ஒப்பன் என வினைச்சொற் போல நிற்றலின், அதுவும் வினைக்குறிப்பாயிற்று.
1. அகம். 80. 2. இதனையும் அடுத்த நூற்பாவையும் இணைத்து ஒரே நூற்பாவாகக் கொள்வர் இளம்பூரணர்.
|