இ - ள். அ ஆ வ என்னும் ஈற்றினை உடைய அக்கூற்று மூன்று சொல்லும் அஃறிணைப் படர்க்கைக்கண் பன்மை உணர்த்தும் சொல்லாம், எ - று. அஃறிணை என்பது வருகின்ற சூத்திரத்தினின்றும் தந்துரைக்கப்பட்டது. எ - டு. உண்டன, உண்கின்றன, உண்பன; உண்ணல; உண்ணா; உண்குவ எனவரும். பிறவுமன்ன. (19) அஃறிணை ஒருமைத் தெரிநிலை வினை முற்று 211. | ஒன்றன் படர்க்கை1 தறட ஊர்ந்த குன்றிய லுகரத் திறுதி யாகும். |
அஃறிணைப் படர்க்கைக்கண் ஒருமை உணரவரும் சொல்லாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். அஃறிணையொன்றனை அறியவரும் படர்க்கை வினைச்சொல் த, ற, ட க்களை ஊர்ந்த குற்றியலுகரத்தினை ஈறாக உடைய, எ - று. எ - டு. உண்டது, உண்ணாநின்றது, உண்பது, உண்ணாது; கூயிற்று; உண்டு எனவரும். உண்டு என்பது உண்டது என்னும் பொருட்டு. பிறவுமன்ன. (20) அஃறிணை வினைமுற்றின் தொகை 212. | பன்மையும் ஒருமையும் பாலறி வந்த அம்மூ விரண்டும் அஃறிணை யவ்வே. |
விரிந்தது தொகுத்தலை உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். மேல், பன்மையும் ஒருமையுமாகிப் பால் உணர எடுத்து ஓதப்பட்ட ஆறு ஈற்று வினைச்சொல்லும் அஃறிணையிடத்த, எ - று. அவையாவன, அ, ஆ, வ, து, று, டு என்பன. (21) எவன் என்னும் வினைமுற்று 213. | அத்திணை மருங்கின் இருபாற் கிளவிக்கும் ஒக்கும் என்ப எவன்என் வினாவே. |
அஃறிணைக்கு உரியதோர் வினாச்சொல் பாலுணர்த்துமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். அஃறிணை இடத்து இருபாற் கிளவிக்கும் எவன் என் வினா ஒக்கும் என்று சொல்லுவர், எ - று.
1. ‘த ட ற’ எனப் பாடங் கொள்வர் இளம்பூரணர்.
|