பொருள் புணர் இடைச்சொல் லாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். கழிந்தது என்னும் பொருண்மையும், ஆம் என்னும் பொருண்மையும், எஞ்சிய இசையான் உணரும் பொருண்மையும் உணரவரும்: மன் என்னுஞ் சொல், எ - று. மன் மன்னை என நின்றது. எ - டு.சிறியகட் பெறினே எமக்கீயு மன்னே (புறம்-235) என்புழி, மன் கழிந்தது என்னும் பொருள்பட நின்றது. ‘புதுமலர் அணிய வின்று வரி, னதுமனெம் பரிசி லாவியர் கோவே.’ (புறம்-147) இதனுள் மன் என்பது ஆம்என்பது குறித்து நின்றது. கூரியதோர் வாண் மன் என்றவழித், திடமின்று என்றானும், வெட்ட வல்லார் உளராயின் என்றானும் ஒழிந்த சொல்லினான் உணரும் பொருள்பட்டது. (4) தில் என்னும் இடைச்சொல்லின் பொருள் 250. | விழைவே காலம் ஒழியிசைக் கிளவியென்(று) அம்மூன் றென்ப தில்லைச் சொல்லே. |
இதுவும் அது. இ - ள். விழைவுப் பொருளையும், காலப்பொருளையும், ஒழியிசைப் பொருளையும் உணரவரும்: தில் என்னுஞ் சொல், எ - று. எ - டு. 1"அரிவையைப் பெறுகதில் லம்ம யானே." இது விழைவு பற்றி வந்தது. 2"பெருங்காட்டு கண்ணிய பருங்கோட்டு ஈமம், நுமக்கரி தாகுக தில்ல எமக்கெம், பெருந்தோட் கணவன் மாய்ந்தென வரும்பிற, வெள்ளித ழவிழ்ந்த தாமரை, நள்ளிரும் பொய்கையும் தீயுமோரற்றே." இதனுள் ஈமம் புகுதல் நுமக்கு அரிதாகுக. எமக்கு இக்காலத்துப் பொய்கையோடு ஒக்கும் என்றமையாற் காலங் குறித்தது. 3"வருகதில் லம்மவெஞ் சேரிசேர." வந்தாலிவ்வாறு செய்வன் என்னும் ஒழியிசை குறித்து நின்றது. (5) கொன் என்னும் இடைச்சொல்லின் பொருள் 251. | அச்சம் பயமிலி காலம் பெருமையென்(று) அப்பால் நான்கே கொன்னைச் சொல்லே. |
இதுவும் அது இ - ள். அச்சப் பொருண்மையும், பயனின் றென்னும் பொருண்மையும், காலப் பொருண்மையும், பெரிதென்னும் பொருண்மையும் பற்றி வரும்: கொன் என்னுஞ் சொல், எ - று.
1. குறுந்--14. 2. புறம்.246. 3. அகம்--276.
|