[இடையியல்]சொல்லதிகாரம் தெய்வச்சிலையார்155

155

முற்றும்மை ஒரோவழி எச்சமும் ஆதல்

281.முற்றிய உம்மைத் தொகைச்சொல் மருங்கின்
எச்சக் கிளவி உரித்தும் ஆகும்.

இதுவும் உம்மைக்கண் வருவதோர் வேறுபாடு உணர்த்துதல்
நுதலிற்று.

இ - ள். முற்றும்மைத் தொகைச்சொற் பொருண்மைக்கண் எச்சப் பொருண்மையும் உரித்து, எ - று.

ஈண்டுத் தொகை என்றது எண்ணின் தொகை.

எ - டு. நின்கையிற் காணம் பத்துங் கொடால் - என்றவழிச் சிலகொடுக்க என்றவாறாம். இது மறுத்த வாய்பாட்டானல்லது வராது.

(36)

ஈற்றசை ஏகாரத்திற்கு உரிய அளவு

282.ஈற்றுநின் றிசைக்கும் ஏயென் இறுதி
கூற்றுவயின் ஓரளபு ஆகலும் உரித்தே.

ஏகாரத்திற்கு உரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். செய்யுள் இறுதிக்கண் நின்று ஒலிக்கும் ஏகாரம் சொல்லுமிடத்து ஒருமாத்திரையாகி நிற்கவும் பெறும், எ - று.

எ - டு. கடல்போற் 1றோன்றல காடிறந் தோரே. (அகம்-1.)
இது ஒரு மாத்திரையாகி நிற்கும்.

(37)

உம், என என்பவற்றுக்குரிய முடிபு

283.உம்மை எண்ணும் எனவென் எண்ணும்
தம்வயிற் றொகுதி கடப்பா டிலவே.

எண்ணின்கட் படுவதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். உம்மையான் எண்ணப்பட்ட எண்ணும், எனவான் எண்ணப்பட்ட எண்ணும் தம்மிடத்துத் தொகை பெறுதல் நியமம் இல, எ - று.

எ - டு. முத்தும் பவழமும் கொணர்ந்தான். நன்றெனத் தீதென நின்றது. முத்தும், பவழமும், பொன்னும் மூன்றுங் கொணர்ந்தான். நன்றெனத் தீதென இரண்டுமாகி நின்றது என இருபாற்றானும் வரும்.

(38)

எண்ணேகாரம் இடையிட்டும் வரும்

284.எண்ணே காரம் இடையிட்டுக் கொளினும்
எண்ணுக்குறித் தியலும் என்மனார் புலவர்.

1. தோன்றல் - என்பது பாடம்.