162தொல்காப்பியம்[உரியியல்]

162

8. உரியியல்

உரிச்சொல்லின் பொதுவிலக்கணம்

293.

உரிச்சொற் கிளவி விரிக்குங் காலை
இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றிப்
பெயரினும் வினையினும் மெய்தடு மாறி
ஒருசொற் பலபொருட்கு உரிமை தோன்றினும்
பலசொல் ஒருபொருட்கு உரிமை தோன்றினும்
பயிலா தவற்றைப் பயின்றவை சார்த்தித்
தத்தம் மரபிற் சென்றுநிலை மருங்கின்
எச்சொல் லாயினும் பொருள்வேறு கிளத்தல்.

இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், உரிச்சொல் ஓத்து என்னும் பெயர்த்து: உரிச்சொல் உணர்த்தினமையாற் பெற்ற பெயர்.

உரிச்சொல் என்பது யாதோ எனின், ஒரு வாய்பாட்டாற் சொல்லப்படும் பொருட்குத் தானும் உரித்தாகி வருவது. அதனானேயன்றே, ஒரு சொற் பலபொருட் குரிமை தோன்றினும், பலசொல் ஒரு பொருட்குரிமை தோன்றினும் என ஓதுவாராயினர்.

எழுத்ததிகாரத்துள் இதனைக் 1குறைச்சொற் கிளவி என்று ஓதினமையால், வடநூலாசிரியர் தாது என்று குறியிட்ட சொற்களே இவையென்று கொள்ளப்படும்: அவையும் குறைச்சொல்லாதலான்.

அஃதேல், தொழிற் பொருண்மை உணர்த்துவன எல்லாம் இதனுள் ஓதினாரோ எனின், வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா, வெளிப்பட வாரா உரிச்சொல் மேன (சூ.2.) என்றா ராகலின், வழக்கின்கட் பயிற்சி இல்லாத சொற்கள் ஈண்டு எடுத்து ஓதப்படுகின்றன என்க.

தொழிலாவது வினையும் வினைக் குறிப்பு மாதலின், அவ்விருவகைச் சொற்கும் அங்கமாகி வெளிப்படாதன ஈண்டுக் கூறப்படுகின்றன. இதன் தலைச் சூத்திரம் என்னுதலிற்றோ எனின், உரிச்சொற் கெல்லாம் உரிய தோர் பொது இலக்கணமும், அவற்றிற்குப் பொருளுணர்த்துந் திறனும் உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். “உரிச்சொற் கிளவி விரிக்குங் காலை என்பது உரிச்சொல் ஆகிய சொல்லை விரித்து உரைக்குங் காலத்து, எ - று.

“இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றி” என்பது சொல்லானும், குறிப்பானும், பண்பானும் புலப்பட்டு, எ - று.

சொல்லாற் புலப்பட்டது உறு என்பது, இதனின் அஃதுறும் என்ற வழி, மிகும் என்னும் பொருள் புலப்பட்டது.


1. 482-சூ.