390. | மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா. |
உரிச்சொற்கு உரியதோரிலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. வந்தது கொண்டு வராதது முடித்தல் என்பதனாற் பெயர்ச்சொற்கு உரிய இலக்கணமும் உணர்த்திற்றென்று கொள்ளப்படும். இ - ள். இச் சொற்குப் பொருள் இதுவென நியமித்தற்குக் காரணம் விளங்கத் தோன்றா. எ-று. எனவே, காரணமுளதென்பதூஉம். அது புலனாகாதென்பதூஉம் கூறியவாறாம். என்னை புலனாகாமை எனின், மிகுதல் என்பதற்குப் பொருளாவது முன்பு நின்ற நிலையிற் பெரிதாதல் அப்பொருண்மை அச்சொற் காட்டுதற்குக் காரணம் உரைப்பரிதாதலான் அஃதேல், காரணமுளபோலக் கூறியவதனாற் பயனென்னையெனின். பொருண்மேற் சொன்னிகழ்தல் தொன்றுதொட்டு வருகின்றதாதலின், உலகினுள் மிக்காரெல்லாரும் காரணமின்றி வழங்குபவோ என்னும் ஐயங் குறித்துக் கூறினார். அஃதேல், இன்னவெழுத்து, இப்பொருள்படும் எனவும்; இத்தன்மைத்து எனவும், இப்பயன்தரும் எனவும் மற்றை நூலகத்தும் பிறாண்டும் உரைக்கப்படு மாகலான், காரணம் உரைப்பரிது என்பது குற்றமெனின், அதற்கு விடை வருகின்ற சூத்திரத்தான் விளங்கும். (98) 391. | எழுத்துப்பிரிந் திசைத்தல் இவணியல் பின்றே, |
எல்லாச் சொற்கும் உரியதோர் இலக்கண முணர்த்துதல் நுதலிற்று. இ - ள். ஒரு சொற்கு அங்கமாகிய எழுத்துப் பிரிந்து நின்று பொருள்பட ஒலித்தல் இத்தமிழகத்தில் இல்லை, எ-று. எனவே, மேல் எழுந்த கடா விடை பெற்றதாம். பொருட்குப் பொருள்தெரியின் என்பது முதலாக இத்துணையும் கூறப்பட்டது உரிச்சொற்குப் பொருளுணர்த்துமாறாம். (99) 392. | அன்ன பிறவும் கிளந்த வல்ல பன்முறை யானும் பரந்தன வரூஉம் உரிச்சொல் எல்லாம் பொருட்குறை கூட்ட இயன்ற மருங்கின் இனைத்தென அறியும் வரம்புதமக் கின்மையின் வழிநனி கடைப்பிடித் தோம்படை ஆணையிற் கிளந்தவற் றியலாற் பாங்குற உணர்தல் என்மனார் புலவர். |
இஃது உரிச்சொற் கெல்லாம் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று. இ - ள். ‘அன்னபிறவும்.....................எல்லாம்’ என்பது ஈண்டு எடுத்து ஓதப்பட்டனவல்லாத அத்தன்மைய பிறவுமாகிப் பல்லாற்றானும் பரந்துவரும் உரிச்சொல் எல்லாம், எ-று.
|