தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் விளக்கவுரை [பண்டித வித்துவான், சைவப்புலவர், சித்தாந்த நன்மணி கு. சுந்தரமூர்த்தி அவர்கள்]
1. கிளவியாக்கம் முதல் நூற்பா
நான்கு சொற்கும் உரிய பொது இலக்கணத்தைக் கிளவியாக்கத்தில் கூறி, அடுத்து வேற்றுமை யியலில் பெயரது இலக்கணத்தைக் கூறவந்த ஆசிரியர் இயைபு பட்டமையான் வேற்றுமை யிலக்கணத்தையும், அதனது மயக்கத்தையும், சிறப்பில்லா விளிவேற்றுமையையும் முறையே வேற்றுமை யியல், வேற்றுமை மயங்கியல், விளி மரபு ஆகிய மூன்று இயல்களிலும் கூறி, அடுத்துப் பெயர், வினை, இடை, உரி ஆகியவற்றின் இலக்கணங்களை அவ்வவ்வியல்களிலும், அவற்றுள் உணர்த்தப்படாது எஞ்சி நின்றனவற்றை எச்சவியலிலும் கூறியுள்ளார் என்பர் இளம்பூரணர். கல்லாடரும் இவர் கருத்தினரே. நான்கு சொற்களுக்கும் உரிய பொதுவிலக்கணத்தைக் கிளவியாக்கத்தில் கூறிய ஆசிரியர் அடுத்துப் பொது இலக்கணம் கூறுதல் முறைமையாயினும் வேற்றுமையை யுணர்த்துதற்கு வேறு இடம் இன்மையானும், பொதுவிலக்கணமாதல் ஒப்புமையானும், உருபேற்றல் பெயர்க்கிலக்கணமாகலின் வேற்றுமை யுணர்த்திப் பெயருணர்த்தல் முறைமையாகலானும், அதன்பின் வேற்றுமையிலக்கணம் கூறி, அதனது மயக்கத்தை வேற்றுமை மயங்கியலிலும், சிறப்பில்லா விளி வேற்றுமையை விளிமரபிலும், பின் பெயர், வினை, இடை, உரியின் இலக்கணங்களை அவ்வவ் வியல்களிலும், இவற்றுள் கூறா தொழிந்த இலக்கணத்தை எச்சவியலிலும் கூறினார் என்பர் சேனாவரையர். நச்சினார்க்கினியரும் இவர் கருத்தினரே. இம் மூவர்க்கும் கிளவியாக்கம் என்பது நான்கு சொற்களுக்கும் உரிய பொதுவிலக்கணம் கூறும் இயல் என்பதே கருத்தாகும். ஆயினும் இதனையடுத்து வேற்றுமை யியல் வைத்திருப்பது பற்றித்தான் இளம் பூரணர் ஒரு வகையாகவும், ஏனையிருவரும் ஒரு வகையாகவும் கருதுகின்றனர்.
|